மூத்தவனா? இளையவனா?

லூக் 15 : 1-3, 11-32

“உன் நண்பன் யாரென்று சொல் நீ யாரென்று சொல்கிறேன்” என்றும் உன் எதிரி யாரென்று சொல் நீ யாரென்று சொல்கிறேன்” என்றும் கூற கேள்விப்பட்டிருப்போம். ஆனால் இந்த இரண்டையும் மாற்றி, “நீ வணங்கும் கடவுள் யாரென்று சொல் நீ யாரென்று சொல்கிறேன்” என்கிறது ஊதாரி மகன் நற்செய்தி. ‘மொத்த நற்செய்தி நூல்களின் சாரம்’ என்று இந்த உவமையைக் குறிப்பிடலாம். சில விவிலிய அறிஞர்கள் இப்பகுதியினை, ‘விவிலியத்திற்குள் ஒரு விவிலியம்’ என்கிறார்கள்.

பிற மதத்தினர் கடவுளை நீதியோடு தண்டிக்கக் கூடியவராகவே பார்க்கிறார்கள். ஆனால் நாம் கடவுளை நீதியோடு அன்பு செய்கிறவராகப் பார்க்கிறோம். இங்கு மூத்தமகன் கட்டளைகள் அனைத்தையும் கடைபிடித்து வாழ்ந்த யூதர்களையும், சொத்துக்களை எல்லாம் இழந்த இளையமகன் பிற இனத்தவர்களையும் பாவிகளையும் குறிக்கின்றனர். இந்த உவமையில் சிறப்பானது இறுதியில்தான் உள்ளது. அது என்னவென்றால் மூத்தமகன் வீட்டிற்குள்ளே சென்றானா? இல்லையா? என்பது தான். இதனை ஆண்டவர் இயேசு வாசிக்கின்ற, வாழ்கின்ற நம் ஒவ்வொருவரின் கைகளிலும் விட்டுவிட்டார்.

கட்டளைகள் அனைத்தையும் கடைபிடித்து அவரோடு இருந்த மூத்த மகன், கடவுளைத் தவறுகளைக் கண்டிக்கிறவராக மட்டும் பார்க்கவில்லை. ஒருபடி மேலே சென்று தன்னை அனைத்திலும் சிறந்தவன் என்றும், தன் தந்தையை நெறிதவறியவர் என்றும், பாவியான இளைய மகனை ஏன் ஏற்றுக் கொண்டீர்? என்றும், அவனைத் தண்டித்தருளும் என்றும் முணுமுணுத்துக் கொண்டே வெளியில் நிற்கிறான். வீட்டைவிட்டுப் போனவனோ தன்னிலை உணர்ந்து, முழுவதுமாகத் தன்னைத் தாழ்த்தி, தண்டிக்கும் தந்தையாக அவரைப் பாராமல், இரக்கமுள்ள பரிவுள்ள தந்தையாக அவரைப்பார்த்து, அவரிடமே திரும்பி வந்து வீட்டிற்குள் செல்கிறான்.

நமது கத்தோலிக்கக் கிறித்தவர்களிடம் குறிப்பாக தினமும் திருப்பலிக்கு வருபவர்கள், செபமாலை சொல்பவர்கள், கோவில் காரியங்களில் முன்னின்று செயல்படுபவர்களில் பலர் மூத்தமகனைப் போன்று தான் பல நேரங்களில் முணுமுணுக்கின்றனர். பலநேரங்களில் தங்களை சரியெனக் காட்டிக் கொள்ள, மற்றவர்களைக் குறிப்பாக குருக்களைத் தவறாகப் பேசி முணுமுணுப்பவர்கள் இவர்களே. நீங்கள் மூத்தமகனா? இளையமகனா? என்பதைக் கண்டுபிடிக்க மிக எளிய வழி என்னவென்றால், மேலே தரப்பட்டிருக்கும் கடைசிப் பத்தியில் கூறியதை ஏற்றுக் கொண்டால் நீங்கள் இளையமகனின் மனநிலையைக் கொண்டுள்ளீர்கள். அல்லது அதனை வாசிக்கும் போதே ஒருவித நெருடல் கொண்டு உங்கள் மனம் தடுமாறினால் நீங்கள் மூத்தமகனின் மனநிலையைக் கொண்டிருக்கின்றீர்கள் என்பதே உண்மை. மனநிலை மாற்றத்திற்காக இத்தவக்காலத்தினை சரியாகப் பயன்படுத்துவோம்.

– திருத்தொண்டர் வளன் அரசு

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.