மூவொரு கடவுள் விழா

இணைச்சட்டநூல் 4: 32 – 34, 39 – 40
இறைவன் தரும் வாழ்வு

இறைவன் தான் நமக்கு எல்லாமுமாக இருக்கிறார், அந்த இறைவனுக்கு நாம் கீழ்ப்படிதலுள்ளவர்களாக வாழ வேண்டும் என்பதுதான் இந்த பகுதி நமக்கு தரப்படுகிற செய்தி. இஸ்ரயேல் மக்களைப் பொறுத்தவரையில், இறைவன் தான் இந்த உலகத்தைப் படைத்தார் என்பதில் நம்பிக்கை உள்ளவர்களாக இருந்தனர். அதேவேளையில் அவர்கள் மற்ற நாட்டு தெய்வங்களையும் மறுக்கவில்லை. ஆனால், அவர்களை விட, தாங்கள் வழிபடுகிற இறைவன் வல்லமை மிகுந்தவர் என்பதில் அசையாத நம்பிக்கை கொண்டிருந்தனர். அந்த நம்பிக்கையின் வெளிப்பாடு தான், இந்த பகுதியாக அமைகிறது.

கடவுள் மக்களிடமிருந்து எதிர்பார்ப்பது வேறொன்றுமில்லை. அவருடைய கட்டளைகளை நாம் கடைப்பிடித்து வாழ வேண்டும் என்பது மட்டும் தான். இறைவன் இஸ்ரயேல் மக்களை தன் சொந்த இனமாக தேர்ந்தெடுத்திருக்கிறார். அவர்கள் வழியாக இந்த உலகத்திற்கு மீட்பு கொடுக்க வேண்டும் என்பதுதான் அவருடைய திருவுளம். அதற்காகத்தான் இஸ்ரயேல் மக்களை அவர் தேர்ந்தெடுத்தார். இஸ்ரயேல் மக்களை அந்த பணியை நிறைவாகச் செய்வதற்காக ஒரு சில கட்டளைகளைக் கொடுக்கிறார். ஒரு புனிதமான பணிக்கு, இந்த உலகத்திற்கு மீட்பு வழங்கும் பணிக்கு அழைக்கப்பட்டிருக்கும் இஸ்ரயேல் மக்கள் அடிப்படையில், ஒரு சில விழுமியங்களைக் கொண்டிருக்க வேண்டும். அந்த விழுமியங்களைக் கற்றுக்கொடுப்பதுதான் கடவுள் கொடுத்த சட்டங்கள்.

நம்முடைய வாழ்விலும் இறைவன் நிறைவாக வாழ ஆசீர்வதிக்க திருவுளம் கொண்டிருக்கிறார். அதற்கு நாம் இறைவனின் குரலுக்கு செவிமடுக்க வேண்டும். அவருடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிய வேண்டும். அப்போது, நாம் மகிழ்ச்சியுள்ளவர்களாய் வாழ முடியும்.

அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.