மேகமும், காரிருளும் ஆண்டவரைச் சூழ்ந்துள்ளன

மேகம் என்பது கடவுளோடு நெருங்கிய தொடர்புடைய வார்த்தையாக இருக்கிறது. இஸ்ரயேல் மக்கள் எகிப்தின் அடிமைத்தளையிலிருந்து விடுதலைபெற்று வருகிறபோது, கடவுள் பகலில் மேத்தூணாக நின்று, அவர்களைப் பாதுகாத்தார். இங்கே மேகத்தூண் கடவுளின் உடனிருப்பைக் குறிக்கக்கூடிய வார்த்தையாக இருக்கிறது. கடவுள் விண்ணகத்தில் இருக்கிறார். விண்ணகம் மேலே இருப்பதாக மக்கள் நம்பினர். ஆக, கடவுளைச்சூழ்ந்து நிற்பதுதான் மேகங்கள் என்று மக்கள் நம்பினர்.

நம் ஆண்டவர் இயேசுகிறிஸ்து திருமுழுக்கு பெறுகிறபோது, வானம் பிளவுபட்டு அங்கிருந்து இறைத்தந்தையின் குரலொலி கேட்பதை நாம் பார்க்கிறோம். இன்றைய நற்செய்தி வாசகத்திலும் ஆண்டவரின் உருமாற்ற நிகழ்வில் இதனைப்பார்க்கிறோம். மேகத்தினின்று இறைத்தந்தையின் குரல் ஓங்கி ஒலிக்கிறது. இவ்வாறு மேகங்கள் கடவுளின் உடனிருப்பை நமக்கு வெளிப்படுத்துவதாக அமைந்திருக்கிறது. அதேபோல, மேகங்கள் இந்த உலகத்திற்கு பொதுவானவை. எங்கும் நிறைந்திருப்பவை. இறைவனும் அனைவருக்கும் பொதுவானவர், எங்கும் நிறைந்திருக்கிறவர் என்பதை இங்கு நாம் கற்றுக்கொள்ளலாம்.

எங்கும் நிறைந்திருக்கிற இறைவனில் நாம் தந்தைக்குரிய கண்டிப்பையும், தாய்க்குரிய பாசத்தையும் கற்றுக்கொள்வோம். அது நமக்கு நிறைவான மகிழ்ச்சியையும், இறைவனின் அளப்பரிய அன்பையும் எடுத்துக்காட்டும். அந்த அன்பில் வேரூன்றியவர்களாக வாழ்வோம்.

– அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.