வாழ்க்கையில் விழாமல் இருக்க இது வேண்டும்…

மத்தேயு 7:21,24-27

இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன்.

திருவிவிலியத்தில் உள்ள ஆண்டவரின் வார்த்தைகள் மனிதர்களாகிய நமக்கு வழங்கப்பட்டிருக்கிற அன்பு அறிவுரைகள். நம் வாழ்வை உயர்த்தும் அமுதமொழிகள். வாழ்க்கையில் நாம் விழாமல் நேராகச் செல்வதற்கான ஏணிப்படிகள். திருவிவிலியத்தை படிக்கிறவர்கள் தடுமாறுவதில்லை. தலைநிமிர்ந்து நிற்பார்கள். திருவிவிலியம் செய்யும் இரண்டு நன்மைகளை நாம் இன்று தெரிந்துக் கொள்ள வேண்டும்.

1. துப்புரவு செய்கிறது
காலையிலே திருவிவிலியத்தை எடுப்பவர் துப்புரவு செய்கிறார். எதை துப்புரவு செய்கிறார்? தன் மனதில் மாட்டிக்கிடக்கிற மாசுக்களை துப்புரவு செய்கிறார். ஆகவே திருவிவிலியம் வாசிப்பதால் காலையிலே மனது சுத்தப்படுத்தப்படுகிறது. அந்த நாளை பரிசுத்தமாக வாழ வேண்டும் என்ற எண்ணம் மனதிற்குள்ளே மிக விரைவாக ஓடி வருகிறது. இப்படி செய்வதால் நாம் வாழ்வில் விழுவதே கிடையாது.

2. துயர் துடைக்கிறது
இறைவார்த்தை உயிரளிக்கிறது. தளர்வுற்ற எலும்புகளுக்கு உயிரளிக்கிறது. சோர்வுற்ற மனதிற்கு ஆற்றலளிக்கிறது. பலவீனமான இதயத்திற்கு இதமாக இருக்கிறது. ஆகவே இந்த இறைவார்தை நாம் துயரினால், வருத்தங்களால் நொருங்குண்டு போகாமல் இருக்க நமக்கு தெம்பாக இருக்கிறது. கவலைகளால் நாம் கலங்கி உடைந்து போகாமல், கீழே விழுந்து விடாமல் இருக்க இறைவார்த்தைகள் நம்மை தூக்கி நேராக நிறுத்துகிறது.

மனதில் கேட்க…
1. இறைவார்த்தையின் படி வாழாமல் இருந்ததால் நான் பலமுறை விழுந்திருக்கிறேன் அல்லவா?
2. இறைவார்த்தையை என் துயர்துடைக்கவும், என்னை துப்புரவாக்கவும் பயன்படுத்திருக்கிறேனா?

மனதில் பதிக்க…
என்னை நோக்கி, ஆண்டவரே, ஆண்டவரே எனச் சொல்பவரெல்லாம் விண்ணரசுக்குள் செல்வதில்லை. மாறாக, விண்ணுலகிலுள்ள என் தந்தைதயின் திருவுளத்தின்படி செயல்படுபவரே செல்வர் (மத் 7:21)

அருட்பணி. பிரான்சிஸ் கிறிஸ்துராஜா

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.