வாழ்வு என்னும் கொடையைப் போற்றுவோம்

இழப்பீடு என்பது இழப்பிற்கு சமமான ஒன்றைக் கொடுப்பதாகும். நாம் ஏதாவது பொருளை இழந்து விட்டால், அல்லது மழை, வெள்ளத்தில் நமது பொருட்களை இழந்துவிட்டால், அரசாங்கம் நமக்கு இழப்பீடு தருகிறது. அரசாங்கம் தரக்கூடிய இழப்பீடு நூறில் ஒரு பங்குக்கு கூட சமமாகாது என்பது வேறு கதை. ஆனால், இழப்பீடு வழங்குகிறது. அதேபோலத்தான், விபத்திற்கென்று இழப்பீடு, மருத்துவ இழப்பீடு என்று, இதில் பல வகைகள் அடங்கியிருக்கிறது. ஆக, ஒன்றிற்கு ஈடாக, அல்லது ஈடுபடுத்தும்விதமாகக் கொடுக்கப்படுவதுதான் இழப்பீடு என்பதை நாம் அறிந்து கொள்ளலாம்.

இன்றைய நற்செய்தியில் வாழ்விற்கு ஈடாக எதை நாம் கொடுக்க முடியும்? என்ற கேள்வி எழுப்பப்படுகிறது. பொருட்களுக்கு இழப்பீடாக பணத்தைக் கொடுத்துவிடலாம். ஆனால், இழப்பீடு தர முடியாத ஒன்று இருக்கிறது என்றால், அது நிச்சயம் வாழ்வு தான். பொன் கோடி கொடுத்தாலும், பதவி, புகழ், அந்தஸ்து பெற்றாலும், நமது வாழ்வை இழந்துவிட்டால், அவ்வளவுதான். இந்த உலகத்தில் ஒன்றுமே இல்லை. எனவே, வாழ்வை பாதுகாப்போடு, ஆரோக்யமாக, பயன்தரக்கூடிய விதத்தில் வாழ்வதுதான் சிறப்பாக இருக்க முடியும். இது சாதாரணமாக அனைவரும் அறிந்த உண்மையாக இருந்தாலும், நமது வாழ்வில் இது பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவது இல்லை.

மனிதன் கற்றிருந்தாலும், கற்றுக்கொண்டதை செயல்படுத்துவதில் இன்னும் பின்தங்கிதான் இருக்கிறான். வாழ்க்கை என்றால் என்ன? என்பதைப் பற்றி அனுபவத்தின் மூலம் அறிந்திருந்தாலும், அது மனிதனது வாழ்வில் எத்தகைய தாக்கத்தையும் ஏற்படுத்தியிருப்பதாக தெரியவில்லை. வாழ்வை நல்ல முறையில் வாழ, ஆண்டவரிடத்தில் மன்றாடுவோம்.

~ அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.