வாழ்வு என்னும் கொடை

அறிவுள்ள, அறிவற்ற பணியாளர்களைப்பற்றி இயேசு இங்கே பேசுகிறார். மத்திய கிழக்குப் பகுதிகளில் வீட்டுப்பொறுப்பாளர் எனக்கூறப்படுபவரும் அடிமைதான். அவருடைய பொறுப்பு மற்ற அடிமைகளைப் பொறுப்பாக, அவரவர்க்கு கொடுக்கப்பட்டிருக்கிற பணியைச்செய்யச் சொல்வது. தலைவருடைய நம்பிக்கைக்கு உரியவர் என்றால், இன்னும் அதிகப்பொறுப்பை தலைவர் அவருக்குக் கொடுப்பார்.

அறிவற்ற பணியாளரின் நெறியில்லாத இரண்டு தவறுகளை இயேசு சுட்டிக்காட்டுகிறார். 1. தனது பொறுப்பை தவறாகப்பயன்படுத்துவது. தலைவர் அவரைத் தனது வீட்டின் பொறுப்பாளராக ஏற்படுத்தியிருக்கிறார் என்றால், அதற்கு காரணம், இந்த அடிமை தலைவருடைய மதிப்பைப் பெற்ற அடிமை. எனவேதான், தலைவர் அவரை பொறுப்பாளராக ஏற்படுத்தியிருக்கிறார். ஆனால், இந்தப்பொறுப்பாளரின் வாழ்வை சற்று ஆழமாகச்சிந்தித்துப்பார்த்தால், அவர் தலைவரின் நன்மதிப்பைப்பெற நடித்திருக்கிறார். வீட்டுப்பொறுப்பாளராக மாற வேண்டும் என்பதற்காக, தலைவர் முன்னிலையில் தன்னை நல்லவராக காட்டி வந்திருக்கிறார். ஆனால், நேர்மையற்றவர்களின் சாயம் என்றாவது ஒருநாள் கண்டிப்பாக வெளுத்துவிடும் என்பதற்கு இவர் சிறந்த எடுத்துக்காட்டு. 2. தலைவரின் எதிர்பார்ப்பை நிறைவேற்றாத சோம்பல்தன்மை. தலைவர் இவ்வளவு பெரிய பொறுப்பைக்கொடுத்திருக்கிறார் என்றால், அவரின் எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கும் என்பது, அந்த அடிமைக்கு நன்றாகத்தெரியும். இருந்தபோதிலும், அவர் அதை ஒரு பொருட்டாக எடுக்கவில்லை.

கடவுள் நம் ஒவ்வொருவருக்குமே வாழ்வு என்கிற மிகப்பெரிய கொடையைத்தந்திருக்கிறார். நாம் அனைவருமே இந்த வாழ்வை, கடவுளின் அழைப்புக்கேற்ற வாழ்வாக வாழ வேண்டும். அப்போதுதான், நமக்கும், கடவுள் கொடுத்த இந்த வாழ்விற்கும் பெருமை. கொடையாகப் பெற்றுக்கொண்ட வாழ்வைக் கொடையாக மற்றவர்களுக்குக் கொடுப்போம்.

~ அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.