வாழ்வு மூலம் கடவுளைப் புகழ்வோம்

இந்த உலகத்தில், நமக்கான கடமையை நாம் நிறைவாகச் செய்கிறபோதுதான், நாம் நிறைவைப் பெறுகிறோம். இந்த உலகத்தைவிட்டு, எப்போது செல்ல வேண்டும், என்கிற நேரம் யாருக்கும் தெரியாது. முடிவு யாருக்கும், எப்போதும் வரலாம். நேற்று இருந்தவர்கள் இன்று இல்லை. நாளை யார், யார் இருப்பார்கள் என்பதும் தெரியவில்லை. அதுதான் நமது வாழ்வு. முடிவு எப்போதும் வரலாம் என்பதுதான் நிதர்சனம். அந்த நிதர்சனத்திற்கு நாம் வாழப்பழகிக்கொள்ள வேண்டும். இந்த நிரந்தரமில்லாத உலகத்தில், எந்நேரமும் நமக்கு அழைப்பு வரலாம் என்கிற சூழலில், நமது கடமையை ஆற்றுவதற்கு நாம் மறந்துவிடக்கூடாது.

யோவான் 17: 4 ”நான் செய்யுமாறு நீர் என்னிடம் ஒப்படைத்திருந்த வேலையைச் செய்து முடித்து, நான் உம்மை உலகில் மாட்சிப்படுத்தினேன்”. இயேசு தனது தந்தையை மாட்சிப்படுத்துகிறார். எவ்வாறு? அவருடைய கடமையைச் சரிவரச் செய்து, மாட்சிபடுத்துகிறார். இயேசு இந்த உலகத்தில் வாழ்ந்தது குறுகிய 33 ஆண்டுகள் தான். காலம் குறைவாக இருந்தாலும், இயேசு குறை சொல்லவில்லை. அந்த குறுகிய காலத்திற்குள் நிறைவான வாழ்வு வாழ்கிறார். எப்படி? தனது கடமையை சரிவர வாழ்ந்து. நாம் நமது கடமையை நிறைவாகச் செய்கிறபோது, கடவுளை மாட்சிப்படுத்துகிறோம். கடவுளை வெறும் வார்த்தையால் மட்டுமல்ல, நமது வாழ்வாலும் மாட்சிமைப்படுத்த முடியும் என்பது, இங்கே நமக்கு சொல்லப்படுகிற செய்தி.

கடவுளை மாட்சிமைப்படுத்துவதற்கு நாம் அனைவரும் அழைக்கப்படுகிறோம். எவ்வளவு காலம் வாழ்ந்தோம் என்பதல்ல, எவ்வளவுக்கு நிறைவோடு வாழ்ந்தோம், எவ்வளவுக்கு, நமது கடமையைச் சிறப்பாகச் செய்தோம், என்பதில் தான் நமது வாழ்வு அடங்கியிருக்கிறது. நமது வாழ்வு மூலமாக கடவுளைப் புகழ்வோம்.

~அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.