வாழ்வை நம்பிக்கையோடு எதிர்கொள்வோம்

நம்பிக்கையினால் கடவுளின் அருளை வென்றெடுத்த ஒரு பெண்ணின் வாழ்க்கையை, இன்றைய நற்செய்தியில் நாம் வாசிக்கிறோம். அந்த பெண், இயேசுவின் மீது வைத்திருந்த நம்பிக்கை பலவிதங்களில் வெளிப்படுத்தப்படுகிறது. முதலில் அந்த பெண்ணின் பொறுமை, நம்மை திகைப்படையச் செய்கிறது. அவளது வாழ்வில் மிகப்பெரிய துன்பம் நேர்ந்திருக்கிறது. அவளது மகள், தீய ஆவியினால் ஆக்கிரமிக்கப்பட்டு, குடும்பமே ஒவ்வொரு நாளும் சித்ரவதை அனுபவித்துக்கொண்டிருக்கிறது. கவலையும், கண்ணீரும் அவளை வாட்டியெடுத்துக் கொண்டிருக்கிறது. ஆனாலும், அதனை வெளியே காட்டிக்கொள்ளாமல், துன்பங்களுக்கு மத்தியில் நம்பிக்கையோடு வாழக்கூடிய பெண்ணாக அவள் காணப்படுகிறாள்.

அந்த துன்பங்களோடு இயேசுவை அணுகுகிறபோது, இயேசுவின் பதில் அவளுக்குக் கோபத்தை வரவழைக்கவில்லை. மாறாக, எப்படியாவது, இயேசுவிடமிருந்து, வல்லமையைப் பெற்றுவிட வேண்டும் என்பதில் தான், அவளது எண்ணம் அடங்கியிருக்கிறது. அந்த சோர்வுகளுக்கு மத்தியிலும், பொறுமையோடு இயேசுவுக்கு பதில் சொன்ன பாங்கு, நம்மை மலைக்க வைக்கிறது. வாழ்வை நாம் எப்படி அணுக வேண்டும்? எப்படி அணுகக்கூடாது என்பதற்கு அவளது வாழ்க்கை சிறந்த எடுத்துக்காட்டு.

நமது வாழ்வில் துன்பம் வருகிறபோது, கவலை கொள்கிறோம். அந்த கவலை நம்மைச் சோர்வுறச்செய்கிறது. நமது வாழ்வு முடிந்து விட்டது என்ற முடிவுக்கு வந்துவிடுகிறோம். பின்னால் வரவேண்டிய சாவை, நாமே முன்னால் வரவழைத்து விடுகிறோம். துன்பம் வரும்போதுதான், நாம் அதிக திடமாக இருக்க வேண்டும். கடவுளை அதிகமாக நாட வேண்டும். நமது விசுவாசம் வலுப்பெற்றதாய் மாற வேண்டும்.

~ அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.