விசுவாசத்தளர்ச்சியைப் போக்குவோம்

யூதர்களுக்கு மூன்று திருவிழாக்கள் முக்கியமானவைகளாக இருந்தன. அவைகள் முறையே, பாஸ்கா திருவிழா, பெந்தகோஸ்து திருவிழா மற்றும் கூடாரத்திருவிழா. யெருசலேம் ஆலயத்திலிருந்து 15 மைல்களுக்குள் வாழும் ஒவ்வொரு யூத ஆண்மகனும், இந்த திருவிழாக்களில் கட்டாயம் கலந்தகொள்ள வேண்டும். இன்றைய நற்செய்திப் பகுதியை யோவான் ஒரு உருவகமாக எழுதியிருக்கலாம் என சிலர் விவிலிய அறிஞர்கள் கருதுகிறார்கள். முடக்குவாதமுற்ற மனிதன் இஸ்ரயேல் மக்களை குறிக்கிறவர். ஐந்து தூண்களும் முதல் ஐந்து புத்தகங்களைக் குறிக்கிறது. 38 ஆண்டுகள் என்பது இஸ்ரயேல் மக்கள் பாலைவனத்தில் நாடோடிகளாக வாழ்ந்ததைக்குறிக்கிறது. தண்ணீரைக்கலக்குவது என்பது திருமுழுக்கை நினைவூட்டுகிறது. ஆனால், உண்மையில் இயேசுவின் புதுமைகளுள் ஒன்றுதான் இது என்று வாதிடுகிற அறிஞர்கள்தான் ஏராளம்.

இயேசு அந்த மனிதரிடம் ‘நலம் பெற விரும்புகிறீரா?’ என்று கேட்கிறார். இயேசுவின் இந்தக்கேள்வி பொருத்தமான கேள்வியாக, அறிவார்ந்த கேள்வியாக இருக்க முடியுமா? என்ற கேள்வி நமக்குள்ளாக எழலாம். காரணம், இத்தனை ஆண்டுகளாக, அந்த குளத்தின் கரையில் அந்த மனிதன் இருந்ததே, குணமடைய வேண்டும் என்ற எண்ணத்தில்தான். அவனைத்தூக்கிவிட்டு, உதவக்கூடியவர்கள் யாரும் இல்லையெனினும் ஏதோ ஒரு நம்பிக்கையில், என்றாவது தனக்கும், வானதூதர் அந்த குளத்தைக் கலக்கும்போது, குளத்தில் இறங்கும் ஒரு வாய்ப்புகிட்டும் என்ற நம்பிக்கையில்தான் அங்கே அமர்ந்திருக்கிறார். அப்படிப்பட்ட மனிதரிடத்தில் இயேசு இந்தக்கேள்வியைக் கேட்பது சரியா? என்று நாம் நினைக்கலாம். இயேசு அந்த மனிதரிடத்தில் இந்தக் கேள்வியைக் கேட்பதன் நோக்கம், முடக்குவாதமுற்ற மனிதரிடத்திலே உள்ள நம்பிக்கையின் ஆழத்தைக் கண்டுபிடிப்பதற்காக. அந்த மனிதர் அங்கே இருந்தது நம்பிக்கையின் அடிப்படையில்தான். ஆனாலும், தொடக்கத்தில் அந்த இடத்திற்கு வந்தபோது இருந்த அதே விசுவாச ஆழம் அவனிடம் இருக்கிறதா? என்பதை இயேசு அறிய விரும்புகிறார். ஏனெனில், இயேசுவின் வல்லமையைவிட, அந்த மனிதரின் விசுவாசம் தான், அவர் செய்யப்போகிற புதுமையில் அதிக முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை, இயேசு அறியாதவரல்ல. அந்த மனிதர் தருகிற பதிலில் அவரின் நம்பிக்கையின் ஆழம் இன்னும் குறையாமல் இருப்பதை இயேசு கண்டுகொள்கிறார். எனவே அவருக்கு குணமளிக்கிறார்.

இறைவனின் அபரிவிதமான ஆசீரைப்பெற நமக்குத்தடையாக இருப்பது விசுவாசத்தளர்ச்சி. இந்த விசுவாசத்தளர்ச்சிக்கு பல காரணங்கள் இருக்கலாம். கடவுளின் அன்பை முழுமையாகப் புரிந்துகொள்ளாமை, பொறுமையின்மை, துன்பங்களை ஏற்றுக்;கொள்ளும் பக்குவமின்மை போன்றவை விசுவாசத்தளர்ச்சிக்கு வழிவகுக்கு காரணிகளாகும். விசுவாசத்தளர்ச்சியை அகற்றி, இறைவனின் இரக்கத்தைப்பெற விசுவாசத்தை வளப்படுத்துவோம்.

– அருட்பணி. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.