விசுவாசத்தை அதிகரிக்க…

இயேசு தான் உண்மையில் கடவுளிடமிருந்து தான் வந்திருக்கிறேன் என்பதை, யூதர்களுக்கு பல வழிகளில் வெளிப்படுத்த முயன்றிருக்கிறார். எப்படியாவது அவர்கள் உண்மையை அறிந்துவிட வேண்டும் என்று, தன்னால் இயன்றதைச் செய்திருக்கிறார். ஆனால், யூதர்களின் மனம் கல்லாகத்தான் இருந்தது. இன்றைய நற்செய்தியிலும் இயேசு, தனது வாதத்திறமையினால், அவர்களுக்கு தான் யாரிடமிருந்து வருகிறேன்? என்பதை உணர்த்த விரும்புகிறார். அதற்கான முயற்சியை எடுக்கிறார்.

”தந்தையின் சொற்படி பல நற்செயல்களை உங்கள் மீது செய்து காட்டியிருக்கிறேன்” என்று சொல்கிறார். பொதுவாக, வார்த்தைகளில் போதிக்கிறபோது, அது வாதத்திற்கு உட்பட்டது. நாம் சொல்லக்கூடிய வார்த்தைகளை ஒவ்வொருவரும் அவரவர் பிண்ணனியிலிருந்து புரிந்து கொள்வார்கள். அது நாம் சொல்கிற அர்த்தத்தில் புரிந்து கொள்ளப்படுமா? என்றால், அது நிச்சயம் இல்லை. ஆனால், செயல்பாடுகளைப் பொறுத்தவரையில், வாதத்திற்கு அப்பாற்பட்டது. இயேசு ஒரு சிறந்த போதகர். காரணம், வார்த்தையினால் மட்டுமல்ல, நற்செயல்களால், தான் யார் என்பதை, மற்றவர்களுக்கு உணர்த்த முயற்சி எடுத்தவர். இதுவரை யாரும் அப்படிப்பட்ட நற்செயல்களை, மக்கள் மத்தியில் செய்தது இல்லை. எனவே, தன்னுடைய நற்செயல்களின் பொருட்டு அவர்களை, நம்புவதற்கு அழைப்புவிடுக்கிறார்.

விசுவாசம் என்பது மற்றவர்கள் போதிக்க நாம் கேட்பதனால் அதிகரித்து விடாது. நாம் தனிப்பட்ட முறையில், நமது வாழ்க்கையில் இயேசுவை அனுபவிக்கிறபோது தான், நாம் அதிகரிக்கச் செய்ய முடியும். அந்த விசுவாசம் தான், காலத்திற்கும் நிலைத்திருக்கும் விசுவாசமாக இருக்க முடியும். ஆக, இயேசுவை அனுபவிக்க நாம் என்ன முயற்சி எடுக்கிறோம்? என சிந்தித்துப் பார்ப்போம்.

அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.