விண்ணரசின் விருந்தாளிகள்

கடவுள் வரலாற்றில் தனது பாதத்தைப்பதிக்கிற காலம் மெசியாவின் காலமாகக் கருதப்படும் என பாரம்பரியமாக யூதர்கள் நம்பினர். அவ்வாறு கடவுளின் நாள் வருகிறபோது, அனைவருக்கும் அவர் விருந்து ஒன்றை ஏற்பாடு செய்வார் என்றும், விருந்திலே லீவியத்தான் என்னும் மிகப்பெரிய கடல் விலங்கு உணவாகப் பரிமாறப்படும் என்றும் நம்பினர். இத்தகைய மெசியா தருகிற விருந்தைப்பற்றிதான், இயேசுவிடத்திலே அந்த மனிதர் கூறுகிறார். விருந்திலே பங்கெடுக்கிறவர்கள் யூதர்கள் தான் என்றும், பாவிகளுக்கும், புறவினத்தார்க்கும் அந்த விருந்திலே பங்கில்லை என்றும், அந்த மனிதர் தனது பாரம்பரிய நம்பிக்கையை வெளிப்படுத்துகிறார்.

இந்த உவமையில் கடவுளை தலைவராகவும், விருந்தினர்களாக யூதர்களையும் இயேசு ஒப்பிடுகிறார். வரலாறு முழுவதும் யூதர்கள் ஆண்டவரின் நாளுக்காக, ஆண்டவர் வரலாற்றில் கால் பதிக்கும் நாளுக்காக காத்திருந்தனர். ஆனால், உண்மையில் இயேசு வடிவத்தில் இறைவன் கால் பதித்தபோது, அதை நம்பாமல், அந்த உண்மையை ஏற்றுக்கொள்ளாமல் இயேசுவைப் புறக்கணித்தனர். வீதிகளில் காணப்படுகிற ஏழைகள், கைவிடப்பட்டவர்களை பாவிகளுக்கும், புறவினத்தார்க்கும் ஒப்பிடுகிறார். இந்த விருந்திலே தங்களுக்கு இடமே இல்லை என்று நினைத்தவர்களுக்குத்தான் இடம் தரப்படுகிறது.

வரமுடியாது என்று சொல்கிற மூன்று காரணங்களை மண்ணாசை, பொன்னாசை மற்றும் பெண்ணாசைக்கு ஒப்பிடலாம். இவைகள் கடவுள் தரும் விருந்திலே பங்கெடுப்பதற்கு தடையாக இருப்பவை. இவற்றையும் கடந்தால் தான், கடவுள் தரும் விருந்திலே பங்கெடுக்க முடியும். இல்லையென்றால், கடவுள் அரசில் நமக்கு இடமில்லை.

~ அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.