வீண் ஆடம்பரங்களைத் தவிர்ப்போம்

யூதர்கள் தூய்மைக்கு அதிகமாக முக்கியத்துவம் கொடுக்கக்கூடியவர்கள். உண்ணும் உணவிலும், உடலிலும், பயணத்திலும் தூய்மையை கருத்தூன்றி கடைப்பிடிக்கக்கூடியவர்கள். இது சுகாதாரம் சார்ந்ததற்கான அல்ல, சமயம் தொடர்பானது. தாங்கள் தூய்மையான இனம் என்ற எண்ணம், யூதர்களுக்கு அதிகமாக இருந்தது. எனவே, பல தூய்மைச்சடங்குகள் அவர்கள் பின்பற்றுவதற்கு கொடுக்கப்பட்டிருந்தது. அந்த தூய்மைச்சடங்குகளில் இருக்கும் போலித்தனத்தை இயேசு விரிவாக விளக்குகிறார்.

திராட்சை இரசம் யூதர்களின் உணவில் கலந்துவிட்ட ஒன்று. அந்த திராட்சை இரசத்தை தயாரித்து, மற்றவர்கள் பருக கொடுக்கிறபோது கூட, தூய்மைச்சடங்கு சம்பிரதாயத்தை, இம்மியளவு பிசகாமல் அவர்கள் கடைப்பிடித்தார்கள். கண்ணுக்குத் தெரியதாக பூச்சிகள் அதில் இருக்கக்கூடாது என்பதற்காக, அதனை வடிகட்டி மற்றவர்களுக்குக் கொடுத்தார்கள். வெளிப்படையாகச் சொன்னால், இந்தளவுக்கு அவர்கள் இருக்க வேண்டும் என்று சட்டம் அவர்களை எதிர்பார்க்கவில்லை. ஆனாலும், அவர்கள் சம்பிரதாயதச் சட்டங்களை அவ்வளவு நேர்த்தியாகச் செய்தார்கள். அதேவேளையில், அந்த சட்டங்கள் காட்டும் மனித மதிப்பீடுகளை ஒரு பொருட்டாக எண்ணாது வாழ்ந்தனர். இதனைத்தான் இயேசு ஒட்டகம் என்கிற உருவகத்தோடு பொருத்திப் பேசுகிறார். ”கொசுவை வடிகட்டி அகற்றுகிறீர்கள். ஆனால், ஒட்டகத்தையோ விழுங்குகிறீர்கள்” என்று சொல்வது இதன் அடிப்படையில் தான்.

எது தேவையோ அதனை கண்ணும் கருத்துமாகச் செய்வதற்கு நாம் முயற்சி எடுப்பது கிடையாது. ஆனால், எது தேவையில்லையோ, அதனைச் செய்வதற்கு நாம் அதிகமான முயற்சி, தேவையில்லாத முயற்சியை எடுக்கிறோம். கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் கொண்டாடும் திருவிழாக்கள் இதற்கு சிறந்த சான்றாக இருக்கிறது. வீண் ஆடம்பரங்களுக்கும், பகட்டிற்கும் முக்கியத்துவம் கொடுக்கிறோம். இரக்கச்செயல்களைக் காட்டுவதற்கு ஒதுங்குகிறோம். இப்படிப்பட்ட முரண்பாடாக வாழ்வைத்தவிர்த்து, இயேசு காட்டும் வழியில் நடப்போம்.

~ அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.