வேர்களைத்தேடி…

மத்தேயு 16 : 13- 20

  • அதிகாரம் என்பது ஆட்டுவித்து ஒடுக்குவதற்கல்ல! அன்போடு வழிநடத்துவதற்கு!
    அதிகாரம் என்பது வாட்டி வதைப்பதற்கல்ல! வாஞ்சையோடு இருப்பதற்கு!
    அதிகாரம் என்பது திட்டித் தீர்ப்பதற்கல்ல! தீர்க்கமான திட்டமிடுவதற்கு!

இன்றைய நாள் நம் தாய்த் திருஅவையின் முதல் திருத்தந்தை பேதுருவின் தலைமைப்பீடத்தினை நினைவு கூர்ந்து பெருமையோடு கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். இந் நாளினை நாம் உண்மையிலேயே கொண்டாட வேண்டுமா என்ற கேள்வி பலரின் எண்ணத்தில் உதிப்பது இயற்கையே. ஆனால் இன்று, இக்கட்டான காலகட்டத்தில் இன்னும் சிறப்பாக கொண்டாடக் கடமைப்பட்டிருக்கிறோம். காரணம், வெளியிலிருந்து வரும் பிரச்சனையைக் காட்டிலும் கிறிஸ்தவர்களுக்குள் இருக்கின்ற சவால்கள் மிக அதிகம். இன்று நம் வேர்களை மறந்து வாழும் கிறிஸ்தவர்களுக்கு மத்தியில் சிலர் நம் வேர்களை திட்டமிட்டு மூடி மறைக்கிறார்கள். வெட்டி அழிக்கிறார்கள். நம் வேர்களைத் தேடி இன்றைய கிறிஸ்தவர்களை அழைத்துச் சென்றாலே பல பிரிவினை சபையைச் சார்ந்தவர்களுக்கு உண்மை எது? என புலப்பட்டுவிடும். அவர்களின் சாயம் வெளுத்து விடும். பாமர மக்களை அவர்களால் ஏமாற்றி பிழைக்கவும் முடியாது. ‘பேதுரு’ என்ற பாறையின் மீது நம் ஆண்டவர் இயேசு கட்டிய இத்திரு அவையின் தலைமைப் பீடத்தை இன்று, “பாறை”யின் வாரிசாக, வாழையடி வாழையாக 266- ஆம் திருத்தந்தை பிரான்சிஸ் அலங்கரிக்கிறார்.

‘நான் கட்டுகின்ற இந்தத் திருஅவையைப் பாதாளத்தின் வாயில்களே வெற்றிக் கொள்ளா’ என்றார் இயேசு. அப்படியிருக்க இன்று பல பேர் கத்தோலிக்க திருஅவையின் சில துளிகளை உதரிவிட்டுவிட்டு கத்தோலிக்க திருஅவையினரை திசை திருப்புகிறார்கள். பாதாளத்தின் வாயில்களை விட இவர்கள் மோசமானவர்களோ? என எண்ணத் தோன்றுகிறது. காரணம் அந்த அளவிற்கு அரைகுறையாய் திருவிவிலியத்தை வாசித்துவிட்டு அவர்களுக்கு தேவைக்கு ஏற்றார்போல் பயன்படுத்திக் கொள்கிறார்கள். தூயபேதுருவின் மீது கட்டப்பட்ட திருஅவையை எப்படி இவர்கள் இடிக்க முயல்கின்றனர் என்பதே மிகப் பெரிய கேள்வி. ‘விண்ணரசின் திறவுகோலை நான் உனக்குத் தருவேன்’ என்று இயேசு சொன்னவர்களைப் பார்த்து உங்களுக்கெல்லாம் இரட்சிப்பு இல்லை. நீங்கலெல்லாம் விண்ணகம் செல்ல முடியாது என்று நம்மை எள்ளி நகையாடுபவர்கள் இன்னும் இருக்கிறார்கள். இவர்களைப் பார்க்கும் போது ‘தந்தையே இவர்கள் செய்வது இன்னவென்று அறியாமல் செய்கிறார்கள், இவர்களை மன்னியும்’ என்பதைத் தவிர வேறொன்றும் தோன்றவில்லை. ஒவ்வொரு கிறிஸ்தவனும் தாய் திருஅவையில் மீண்டும் இணைய, இந்த பேதுருவின் தலைமைபீடம் உதவுவதாக. நாம் அவைகளைத்தேடி அவற்றின் ஆழத்தினை அறிய முயல பயணிப்போம்.

– திருத்தொண்டர் வளன் அரசு

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.