Chapter: Verses:
Start  End 
 
 
திருவிவிலியம் பொது மொழிபெயர்ப்பு    

மக்கபேயர் - முதல் நூல்

முன்னுரை

மத்தத்தியாவின் மூன்றாம் மகன் யூதா, கிரேக்கமயமாக்கல் மூலம் யூதர்களைப் பலவாறு துன்புறுத்தி வந்த செலூக்கிய ஆட்சியை எதிர்த்துக் கிளர்ச்சியைத் தூண்டிவிட்டு யூதர்களை வழி நடத்தியதால், 'மக்கபே' என்று அழைக்கப் பெற்றார் ('மக்கபே' என்னும் சொல்லுக்குச் 'சம்மட்டி' எனச் சிலர் பொருள் கொள்வர்). காலப்போக்கில் அவருடைய சகோதரர்கள், ஆதரவாளர்கள், பிற யூதத் தலைவர்கள் ஆகிய அனைவருமே 'மக்கபேயர்' என்று குறிப்பிடப் பெற்றனர்.

அந்தியோக்கு எப்பிபானின் ஆட்சி தொடங்கி யோவான் இர்க்கான் ஆட்சிப் பொறுப்பு ஏற்றது வரை (கி.மு. 175-134) யூத வரலாற்றில் இடம் பெற்ற குறிப்பிடத்தக்க சில நிகழ்ச்சிகளை இந்நூல் விளக்குகிறது. ஏறத்தாழ கி.மு. 100-இல் பாலஸ்தீனத்தைச் சேர்ந்த யூதர் ஒருவரால் இந்நூல் எபிரேயத்தில் எழுதப் பெற்றிருக்க வேண்டும். அது தொலைந்து விட, அதன் கிரேக்க மொழி பெயர்ப்பு இன்று மூலபாடமாக விளக்குகிறது.

இஸ்ரயேலைக் காப்பதற்காகக் கடவுள் மக்கபேயரைத் தேர்ந்தெடுத்து வரலாற்றில் அவர்களோடு இருந்து செயல்படுகிறார், அவர் மீது பற்றுறுதி கொள்வோருக்கு வெற்றி அருள்கிறார் என்னும் செய்தியை இந்நூல் வலியுறுத்துகிறது.

நூலின் பிரிவுகள்
  1. முகவுரை 1:1 - 9
  2. யூதர்களின் துன்பமும் மக்கபேயரின் கிளர்ச்சியும் 1:10 - 2:70
  3. யூதா மக்கபேயின் தலைமை 3:1 - 9:22
  4. யோனத்தானின் தலைமை 9:23 - 12:53
  5. சீமோனின் தலைமை 13:1 - 16:24


அதிகாரம் 1

1. முகவுரை
மாமன்னர் அலக்சாண்டர்
1 மாசிடோனியராகிய பிலிப்புமகன் அலக்சாண்டர் முதலில் கிரேக்க நாட்டை ஆண்டுவந்தார்: பின்னர் கித்திம் நாட்டினின்று புறப்பட்டுப் பாரசீகருடையவும் மேதியருடையவும் மன்னரான தாரியுவை வென்று அவருக்குப் பதிலாக ஆட்சிபுரிந்தார். 2 அவர் போர்கள் பல புரிந்து, கோட்டைகள் பல பிடித்து, மண்ணுலகின் மன்னர்களைக் கொலைசெய்தார்.3 மண்ணுலகின் கடையெல்லைவரை முன்னேறிச் சென்று பல நாடுகளைக் கொள்ளையடித்தார்: மண்ணுலகு முழுவதும் அவரது ஆட்சியில் அமைதியாக இருந்தபோது அவர் தம்மையே உயர்வாகக் கருதினார்: அவரது உள்ளம் செருக்குற்றது.4 ஆகவே அவர் வலிமைமிக்க படையைத் திரட்டிப் பல மாநிலங்கள், நாடுகள், மன்னர்கள்மீது ஆட்சிசெலுத்திவந்தார். அவர்களும் அவருக்குத் திறை செலுத்தி வந்தார்கள்.5 அதன்பிறகு அவர் கடின நோயுற்றுத் தாம் சாகவிருப்பதை உணர்ந்தார்.6 ஆதலால் இளமைமுதல் தம்முடன் வளர்க்கப்பெற்றவர்களும் மதிப்புக்குரியவர்களுமான அலுவலர்களை அழைத்து, தாம் உயிரோடு இருந்தபோதே தம் பேரரசை அவர்களுக்குப் பிரித்துக் கொடுத்தார்.7 அலக்சாண்டர் பன்னிரண்டு ஆண்டுகள் ஆட்சிசெய்த பின் இறந்தார்.8 அலக்சாண்டருடைய அலுவலர்கள் தங்களுக்குரிய இடங்களில் ஆட்சி செலுத்தத் தொடங்கினார்கள்.9 அவர் இறந்தபின் அவர்கள் எல்லாரும் முடி சூடிக்கொண்டார்கள். அவர்களுக்குப்பின் அவர்களின் மைந்தர்களும் பல ஆண்டுகள் ஆட்சி செய்தார்கள். அவர்களால் மண்ணுலகெங்கும் தீமைகள் பெருகின.

2. யூதர்களின் துன்பமும் மக்கபேரின் கிளர்ச்சியும்
அந்தியோக்கு எப்பிபானும் நெறிகெட்ட யூதரும்
10 அவர்கள் நடுவிலிருந்து பொல்லாத வழிமரபினன் ஒருவன் தோன்றினான்: அவன் மன்னர் அந்தியோக்கின் மகன் அந்தியோக்கு எப்பிபான் ஆவான்: முன்பு உரோமையில் பிணைக் கைதியாக இருந்த அவன் நூற்று முப்பத்தேழாம் ஆண்டு ஆட்சி செய்யத் தொடங்கினான். கி.மு. 175 11 அக்காலத்தில் இஸ்ரயேலில் தீநெறியாளர் சிலர் தோன்றி, வாருங்கள், நம்மைச் சுற்றிலும் இருக்கும் வேற்றினத்தாரோடு நாம் உடன்படிக்கை செய்துகொள்வோம்: ஏனெனில் நாம் அவர்களைவிட்டுப் பிரிந்ததிலிருந்து நமக்குப் பல வகைக் கேடுகள் நேர்ந்துள்ளன என்று கூறி, மக்கள் அனைவரையும் தவறான வழியில் செல்லத்தூண்டினர்.12 இது அவர்களுக்கு ஏற்படையதாய் இருந்தது.13 உடனே மக்களுள் சிலர் ஆர்வத்தோடு மன்னனிடம் சென்றனர். அவர்கள் கேட்டதற்கு இணங்க, வேற்றினத்தாரின் விதிமுறைகளைக் கடைப்பிடிப்பதற்கு அவன் அவர்களுக்கு உரிமை அளித்தான்.14 வேற்றினத்தாருடைய பழக்கவழக்கத்திற்கு ஏற்ப அவர்கள் எருசலேமில் உடற்பயிற்சிக்கூடம் ஒன்று ஏற்படுத்தினார்கள்:15 விருத்தசேதனத்தின் அடையாளத்தை மறைத்து, தூய உடன்படிக்கையை விட்டுவிட்டு, வேற்றினத்தாரோடு கலந்து, எல்லாவகைத் தீமைகளையும் செய்தார்கள்.

அந்தியோக்கு எகிப்தைக் கைப்பற்றல்
16 அந்தியோக்கு தன் சொந்த நாட்டில் ஆட்சியை நிலைநாட்டிய பின், இரு நாடுகளுக்கு மன்னனாகும் எண்ணத்துடன் எகிப்திலும் ஆட்சிபுரிய விரும்பினான்:17 ஆதலால் தேர்ப்படை, யானைப்படை, குதிரைப்படை, பெரும் கப்பற்படை அடங்கிய வலிமைமிக்க படைத்திரளோடு எகிப்து நாட்டில் புகுந்தான்.18 எகிப்து மன்னனான தாலமியோடு அவன் போர் தொடுக்கவே, தாலமி அவனுக்கு அஞ்சிப் புறமுதுகு காட்டி ஓடினான்: அவனுடைய வீரர்களுள் பலர் வெட்டுண்டு மடிந்தனர்.19 எகிப்து நாட்டின் அரண்சூழ் நகர்கள் பல பிடிபட்டன. அந்தியோக்கு எகிப்திலிருந்து கொள்ளைப் பொருள்களை எடுத்துச் சென்றான்.

அந்தியோக்கு யூதர்களைத் துன்புறுத்தல்
20 நூற்று நாற்பத்து மூன்றாம் ஆண்டில் அந்தியோக்கு எகிப்தை வென்று திரும்புகையில் வலிமைமிக்க படையோடு இஸ்ரயேலைத் தாக்கி எருசலேமை அடைந்தான்: கி.மு. 169 21 அகந்தையோடு திருஉறைவிடத்திற்குள் புகுந்து, பொற்பீடம், விளக்கத்தண்டு, அதோடு இணைந்தவை,22 காணிக்கை அப்பமேசை, நீர்மப் படையலுக்கான குவளைகள், கிண்ணங்கள், பொன் தூபக் கிண்ணங்கள், திரை, பொன் முடிகள், கோவில் முகப்பில் இருந்த பொன் அணிகலன்கள் ஆகிய அனைத்தையும் சூறையாடினான்:23 வெள்ளியையும் பொன்னையும் விலையுயர்ந்த கலன்களையும் கைப்பற்றினான்: ஒளித்து வைத்திருந்த செல்வங்களையும் கண்டுபிடித்து எடுத்துக் கொண்டான்:24 இஸ்ரயேலில் பலரைக் கொன்று குவித்தபின், கொள்ளைப் பொருள்களோடு தன் நாடு திரும்பினான்: தன் செயல்கள்பற்றிப் பெருமையாகப் பேசிவந்தான்.25 இஸ்ரயேல் மக்கள் தாங்கள் வாழ்ந்த எல்லா இடங்களிலும் இஸ்ரயேலைக் குறித்து அழுது புலம்பினார்கள்.26 தலைவர்களும் மூப்பர்களும் அழுது அரற்றினார்கள்: கன்னிப்பெண்களும் இளைஞர்களும் நலிவுற்றார்கள்: பெண்கள் அழகுப்பொலிவினை இழந்தார்கள்.27 மணமகன் ஒவ்வொருவனும் புலம்பி அழுதான்: மணவறையில் இருந்த மணமகள் ஒவ்வொருத்தியும் வருந்தி அழுதாள்.28 தன் குடிமக்கள் பொருட்டு நாடே நடுநடுங்கியது: யாக்கோபின் வீடே வெட்கித் தலைகுனிந்தது.29 இரண்டு ஆண்டுகளுக்குப்பின் மன்னன் வரி தண்டுவதற்காக ஒருவனை யூதேயாவின் நகரங்களுக்கு அனுப்பி வைத்தான். அவன் பெரும் படையோடு எருசலேம் சேர்ந்தான்.30 அமைதிச் செய்தியுடன்தான் வந்திருப்பதாக அவன் எருசலேம் மக்களிடம் நயவஞ்சகமாகக் கூறி, அவர்களது நம்பிக்கையைப் பெற்றான். ஆனால் அவன் திடீரென்று நகர்மீது பாய்ந்து கடுமையாகத் தாக்கி, அவர்களுள் பலரைக் கொன்றான்:31 நகரைக் கொள்ளையடித்துத் தீக்கரையாக்கி, வீடுகளையும் சுற்று மதில்களையும் தகர்த்தெறிந்தான்.32 அவனும் அவனுடைய வீரர்களும் பெண்களையும் பிள்ளைகளையும் நாடு கடத்திக் கால் நடைகளைத் தங்கள் உடைமையாக்கிக் கொண்டார்கள்:33 தாவீதின் நகரில் உயர்ந்த, உறுதியான மதில்களையும் வலுவான காவல்மாடங்களையும் கட்டியெழுப்பி, அதைத் தங்கள் கோட்டையாக்கிக் கொண்டார்கள்:34 தீநெறியாளர்களான பொல்லாத மக்களினத்தை அங்குக் குடியேற்றினார்கள்: இவ்வாறு தங்கள் நிலையை வலுப்படுத்தினார்கள்:35 படைக்கலன்களையும் உணவுப்பொருள்களையும் அங்குச் சேர்த்து வைத்தார்கள்: எருசலேமில் கொள்ளையடித்த பொருள்களை ஒன்று திரட்டி வைத்தார்கள்: இதனால் இஸ்லயேலருக்குப் பேரச்சம் விளைவித்து வந்தார்கள்.36 அந்தக்கோட்டை, திருஉறைவிடத்தைத் தாக்குவதற்கு ஏற்ற பதுங்கிடமாக அமைந்தது: இஸ்ரயேலுக்குக் கொடிய எதிரியாகத் தொடர்ந்து இருந்தது.37 அவர்கள் திருஉறைவிடத்தைச் சுற்றிலும் மாசற்ற குருதியைச் சிந்தினார்கள்: திருஉறைவிடத்தைத் தீட்டுப்படுத்தினார்கள்.38 அவர்களை முன்னிட்டு எருசலேமின் குடிகள் அதைவிட்டு ஓடிவிட்டார்கள். எருசலேம் அன்னியரின் குடியிருப்பு ஆயிற்று: தன் குடிகளுக்கோ அன்னியமானது. அதன் மக்கள் அதனைக் கைவிட்டார்கள்.39 அதன் திருஉறைவிடம் பாழடைந்து பாலைநிலம்போல் ஆயிற்று: திருநாள்கள் துயர நாள்களாக மாறின: ஓய்வுநாள்கள் பழச்சொல்லுக்கு உள்ளாயின: அதன் பெருமை இகழ்ச்சிக்கு உட்பட்டது.40 அதன் மாட்சியின் அளவுக்கு மானக்கேடும் மிகுந்தது: அதன் பெருமை புலம்பலாக மாறியது. 41 எல்லாரும் ஒரே மக்களினமாய் இருக்கவேண்டும் என்றும், தனிப்பட்ட பழக்கவழக்கங்களைக் கைவிடவேண்டும் என்றும் அந்தியோக்கு மன்னன் தன் பேரரசு முழுவதிலும் ஆணை பிறப்பித்தான்.42 மன்னனின் கட்டளைப்படி நடக்கப் பிற இனத்தார் அனைவரும் இசைந்தனர்.43 இஸ்ரயேலருள் பலர் மன்னனுடைய வழிபாட்டுமுறைகளை மனமுவந்து ஏற்றுக்கொண்டனர்: சிலைகளுக்குப் பலியிட்டனர்: ஓய்வுநாளைத் தீட்டுப்படுத்தினர்.44 மன்னன் தன் தூதர்கள் வழியாக எருசலேமுக்கும் யூதாவின் நகரங்களுக்கும் மடல்களை அனுப்பி வைத்தான்: யூதர்கள் தங்கள் நாட்டு மரபுக்குப் புறம்பான பழக்கவழக்கங்களைப் பின்பற்றவேண்டும்:45 எரிபலிகளோ மற்றப் பலிகளோ நீர்மப் படையல்களோ திருஉறைவிடத்தில் நிகழ்வதைத் தடுக்க வேண்டும்: ஓய்வுநாள்களையும் திருவிழாக்களையும் தீட்டுப்படுத்த வேண்டும்:46 திருஉறைவிடத்தையும் அதைச் சேர்ந்த தூய பொருள்களையும் கறைப்படுத்த வேண்டும்:47 பிற இனத்தாரின் பலிபீடங்கள், கோவில்கள், சிலைவழிபாட்டுக்குரிய இடங்கள் ஆகியவற்றைக் கட்டியெழுப்ப வேண்டும்: பன்றிகளையும் தீட்டுப்பட்ட விலங்ககளையும் பலியிடவேண்டும்:48 அவர்கள் தங்கள் திருச்சட்டத்தை மறந்து, தங்கள் விதிமுறைகளையும் மாற்றிக்கொள்ளும் பொருட்டு, தங்கள் மைந்தர்களுக்கு விருத்தசேதனம் செய்வதைத் தவிர்க்க வேண்டும்:49 தங்களை எல்லாவகை மாசுகளாலும் தீட்டுகளாலும் அருவருப்புக்குரியோர் ஆக்கிக்கொள்ள வேண்டும்.50 மன்னனின் கட்டளைப்படி நடவாதவர்கள் சாவார்கள்.51 மன்னன் இந்த கட்டளைகளையெல்லாம் எழுதித் தன் பேரரசு முழுவதற்கும் அனுப்பி வைத்தான்: இவற்றை மக்கள் எல்லாரும் செயல்படுத்த மேற்பார்வையாளரை ஏற்படுத்தினான்: யூதாவின் நகரங்கள் ஒவ்வொன்றும் பலியிடவேண்டும் என்று கட்டளையிட்டான்.52 மக்களுள் பலர், அதாவது திருச்சட்டத்தைப் புறக்கணித்தோர் அனைவரும் அந்த மேற்பார்வையாளர்களோடு சேர்ந்துகொண்டனர்: நாட்டில் தீமைகள் செய்தனர்:53 இஸ்ரயேலர் தங்களுக்கு இருந்த எல்லாப் புகலிடங்களையும் நோக்கி ஓடி ஒளிந்து கொள்ளக் கட்டாயப்படுத்தினர்.54 நூற்று நாற்பத்தைந்தாம் ஆண்டு கிஸ்லேவு மாதம் பதினைந்தாம் நாள் அந்தியோக்கும் அவனுடைய ஆள்களும் பலிபீடத்தின் மேல் நடுங்க வைக்கும் தீட்டை நிறுவினார்கள்: யூதேயாவின் நகரங்களெங்கும் சிலை வழிபாட்டுக்கான பீடங்களைக் கட்டினார்கள்: கி.மு. 167 55 வீட்டுக் கதவுகளுக்கு முன்பும் வீதிகளிலும் தூபம் காட்டினார்கள்:56 தங்கள் கண்ணில் பட்ட திருச்சட்ட நூல் ஒவ்வொன்றையும் கிழித்து நெருப்பிலிட்டு எரித்தார்கள்.57 எவரிடம் உடன்படிக்கை நூல் காணப்பட்டதோ, யார் திருச்சட்டதத்தின்படி நடந்துவந்தார்களோ அவர்கள் அனைவரும் கொல்லப்படவேண்டும் என்பது மன்னனது கட்டளை.58 இவ்வாறு ஒவ்வொரு மாதமும் நகரங்களில் காணப்பட்ட இஸ்ரயேலருக்கு எதிராக அவர்கள் வன்முறையைப் பயன்படுத்தினார்கள்:59 எரிபலிபீடத்தின்மேல் அமைக்கப்பட்டிருந்த சிலைவழிபாட்டுப் பீடத்தின்மீது ஒவ்வொரு மாதமும் இருபத்தைந்தாம் நாள் பலியிடுவார்கள்:60 தங்கள் பிள்ளைகளுக்கு விருத்தசேதனம் செய்வித்த பெண்களை மன்னனின் கட்டளைப்படி கொன்றார்கள்.61 பிள்ளைகளை அவர்களுடைய அன்னையரது கழுத்தில் கட்டித் தொங்க விட்டார்கள்: அவர்களின் குடும்பத்தினரையும் அவர்களுக்கு விருத்தசேதனம் செய்தவர்களையும் கொலைசெய்தார்கள்.62 எனினும் இஸ்ரயேலருள் பலர் உறுதியாய் இருந்தனர்: தூய்மையற்ற உணவுப்பொருள்களை உண்பதில்லை என்று தங்களுக்குள் முடிவு செய்து கொண்டனர்:63 உணவுப்பொருள்களால் தங்களைத் தீட்டுப்படுத்திக் கொள்வதைவிட, தூய உடன்படிக்கையை மாசுபடுத்துவதைவிடச்சாவதே சிறந்தது என்று கருதினர்: அவ்வாறே இறந்தனர்.64 இவ்வாறு இஸ்ரயேல் மீது பேரிடர் வந்துற்றது.


திருவிவிலியம் பொது மொழிபெயர்ப்பு    

Free counters!