Chapter: Verses:
Start  End 
 
 
திருவிவிலியம் பொது மொழிபெயர்ப்பு    

ஆகாய்

முன்னுரை

கி.மு. 520-இல் ஆகாய் இறைவாக்கினர் மூலம் ஆண்டவர் அருளிய இறைவாக்குகளின் தொகுப்பாக இத்திரு நூல் அமைந்துள்ளது. பாபிலோனிய அடிமைத்தனத்தினின்று இஸ்ரயேலர் எருசலேமுக்கு திரும்பி, சில ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆயினும் ஆண்டவரது கோவில் இன்னும் கட்டியெழுப்பப்படவில்லை. அதை விரைவில் மீண்டும் கட்டியெழுப்புமாறு இந்த இறைவாக்குகள் தூண்டுகின்றன. தூய்மையாக்கப்பட்டுப் புத்துயிர் பெற்றுள்ள மக்களுக்குச் செழுமையையும் அமைதியையும் அருள்வதாக ஆண்டவர் வாக்களிக்கிறார்.

நூலின் பிரிவுகள்
  1. கோவிலை மீண்டும் கட்டியெழுப்புமாறு ஆண்டவரின் கட்டளை 1:1 - 15
  2. ஆறுதலும் நம்பிக்கையும் அளிக்கும் இறைவாக்குகள் 2:1 - 23


அதிகாரம் 1

கோவிலை மீண்டும் கட்டியெழுப்ப ஆண்டவரின் கட்டளை
1 தாரியு அரசனது இரண்டாம் ஆட்சியாண்டின் ஆறாம் மாதம் முதல் நாளன்று இறைவாக்கினர் ஆகாய் வாயிலாக ஆண்டவரின் வாக்கு அருளப்பட்டது. அது யூதாவின் ஆளுநரும் செயல்தியேலின் மகனுமான செருபாபேலுக்கும் தலைமைக் குருவும் யோசதாக்கின் மகனுமாகிய யோசுவாவுக்கும் அருளப்பட்ட செய்தி: எஸ்ரா 4:24-5:2; 6:14 2 படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே: 'ஆண்டவரது இல்லத்தை மீண்டும் கட்டியெழுப்புவதற்குரிய காலம் இன்னும் வரவில்லை என்று இந்த மக்கள் சொல்கிறார்கள். 3 அப்பொழுது இறைவாக்கினர் ஆகாய் வாயிலாக ஆண்டவரது வாக்கு அருளப்பட்டது. 4 இந்தக் கோவில் பாழடைந்து கிடக்கும் இந்நேரத்தில், நீங்கள்மட்டும் மாட மாளிகைகளில் குடியிருக்கலாமா?5 ஆதலால், இப்பொழுது படைகளின் ஆண்டவர் கூறுவதைக் கேளுங்கள்: 'உங்களுக்கு நிகழ்ந்திருப்பதை நினைத்துப் பாருங்கள். 6 நீங்கள் விதைத்தது மிகுதி, அறுத்ததோ குறைவு. நீங்கள் உண்கிறீர்கள்; ஆனால் உங்கள் வயிறு நிரம்புவதில்லை. நீங்கள் குடியிருக்கிறீர்கள்; ஆனால் நீங்கள் நிறைவடைவதில்லை. ஆடை அணிகிறீர்கள்; ஆனால் உங்களுள் எவருக்கும் குளிர் நீங்கவில்லை. வேலையாள் தான் கூலியாக வாங்கிய பணத்தைப் பொத்தலான பையில் போடுகிறான். 7 உங்களுக்கு நேர்ந்துள்ளதை நினைத்துப் பாருங்கள்' என்று சொல்கிறார் படைகளின் ஆண்டவர். 8 'எனவே, மலைக்குச் சென்று மரம் கொண்டு வாருங்கள்; என் இல்லத்தை மீண்டும் கட்டியெழுப்புங்கள்; அது எனக்கு உகந்ததாய் இருக்கும்; அங்கே நான் மாட்சியுடன் விளங்குவேன்' என்று சொல்கிறார் ஆண்டவர். மிகுதியான அறுவடைக்காகக் காத்திருந்தீர்கள். 9 ஆனால் கிடைத்தது சிறிதளவே. நீங்கள் வீட்டுக்குக் கொண்டு வந்தபோது அதையும் நான் ஊதித் தள்ளிவிட்டேன். ஏன்? ஏனெனில், எனது இல்லம் பாழடைந்து கிடக்கும் போது, நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் வீட்டைக் கட்டுவதிலேயே கருத்தாய் இருக்கிறீர்கள். 10 எனவே, வானம் உங்களுக்குப் பனி பெய்வதை நிறுத்தி விட்டது; நிலமும் விளைச்சல் தர மறுத்துவிட்டது. 11 மேலும் நாடும் மலையும், கோதுமையும் திராட்சை இரசமும், எண்ணெயும் நிலத்தின் விளைச்சலும், மனிதரும் கால்நடைகளும், உங்கள் உழைப்பின் பயன் அனைத்துமே வறட்சியால் வாடுமாறு நான் செய்திருக்கிறேன்.

ஆண்டவரின் கட்டளைக்கு மக்கள் கீழ்ப்படிதல்
12 அப்பொழுது, செயல்தியேலின் மகன் செருபாபேலும், தலைமைக் குருவும் யோசதாக்கின் மகனுமாகிய யோசுவாவும், மக்களுள் எஞ்சியிருந்தோர் அனைவரும் தங்கள் கடவுளாகிய ஆண்டவரின் குரலுக்கும், தங்கள் கடவுளாகிய ஆண்டவர் அனுப்பிய இறைவாக்கினரான ஆகாயின் சொற்களுக்கும் செவிகொடுத்தனர்; மக்களோ, ஆண்டவர் திருமுன் அஞ்சி நின்றனர். 13 அப்போது ஆண்டவரின் தூதரான ஆகாய் மக்களிடம், "'நான் உங்களோடு இருக்கிறேன்' என்கிறார் ஆண்டவர்" என்னும் ஆண்டவரின் அருட்செய்தியை அவர்களுக்கு அறிவித்தார். 14 அப்போது, ஆண்டவர் யூதாவின் ஆளுநரும் செயல்தியேலின் மகனுமாகிய செலுபாபேலின் உள்ளத்தையும் தலைமைக் குருவும் யோசதாக்கின் மகனுமாகிய யோசுவாவின் உள்ளத்தையும் மக்களுள் எஞ்சியிருந்தோர் அனைவரின் உள்ளத்தையும் தட்டியெழுப்பினார். அவர்களும் சென்று தங்கள் கடவுளாகிய படைகளின் ஆண்டவரது இல்லத்தைக் கட்டும் பணியை மேற்கொண்டார்கள். 15 அந்நாள் தாரியு அரசனது இரண்டாம் ஆட்சியாண்டின் ஆறாம் மாதம் இருபத்து நான்காம் நாள்.


திருவிவிலியம் பொது மொழிபெயர்ப்பு    

Free counters!