Chapter: Verses:
Start  End 
 
 
திருவிவிலியம் பொது மொழிபெயர்ப்பு    

திருப்பாடல்கள் (சங்கீதங்கள்)

அதிகாரம் 3

காலை மன்றாட்டு
(தாவீதின் புகழ்ப்பா; தம் மகன் அப்சலோமிடமிருந்து தப்பியோடிய போது அவர் பாடியது) (2 சாமு 15:13-17:22)
1 ஆண்டவரே, என் எதிரிகள் எவ்வளவாய்ப் பெருகிவிட்டனர்! என்னை எதிர்த்து எழுவோர் எத்தனை மிகுந்து விட்டனர்! 2 'கடவுள் அவனை விடுவிக்கமாட்டார்' என்று என்னைக் குறித்துச் சொல்வோர் பலர். (சேலா) 3 ஆயினும், ஆண்டவரே, நீரே எனைக் காக்கும் கேடயம்; நீரே என் மாட்சி; என்னைத் தலைநிமிரச் செய்பவரும் நீரே. 4 நான் உரத்த குரலில் ஆண்டவரிடம் மன்றாடுகிறேன்; அவர் தமது திருமலையிலிருந்து எனக்குப் பதிலளிப்பார். (சேலா) 5 நான் படுத்துறங்கி விழித்தெழுவேன்; ஏனெனில், ஆண்டவரே எனக்கு ஆதரவு. 6 என்னைச் சூழ்ந்திருக்கும் பல்லாயிரம் பகைவருக்கு நான் அஞ்சமாட்டேன். 7 ஆண்டவரே, எழுந்தருளும்; என் கடவுளே, என்னை மீட்டருளும்; என் எதிரிகள் அனைவரையும் கன்னத்தில் அறையும்! பொல்லாரின் பல்லை உடையும்! 8 விடுதலை அளிப்பவர் ஆண்டவர்; அவர்தம் மக்களுக்கு ஆசி வழங்குவாராக! (சேலா)


திருவிவிலியம் பொது மொழிபெயர்ப்பு    

Free counters!