Chapter: Verses:
Start  End 
 
 
திருவிவிலியம் பொது மொழிபெயர்ப்பு    

இனிமைமிகு பாடல் (உன்னத சங்கீதம் | பாட்டு)

அதிகாரம் 5

பாடல் 16: தலைவன் - தலைவி உரையாடல் ..............தொடர்ச்சி
1 என் தோட்டத்திற்கு நான் வந்துள்ளேன்: என் தங்காய், மணமகளே, நறுமணப் பொருளையும் சேகரிக்கின்றேன்: என் தேனையும் தேனடைகளையும் உண்கின்றேன்: என் திராட்சை இரசத்தையும் பாலையும் பருகுகின்றேன்: தோழர்களே, உண்ணுங்கள்: அன்பர்களே, போதையேறப் பருகுங்கள்.

பாடல் 17: தலைவி கூற்று
2 நான் உறங்கினேன்: என் நெஞ்சமோ விழித்திருந்தது: இதோ, என் காதலர் கதவைத் தட்டுகின்றார்: கதவைத் திற, என் தங்காய், என் அன்பே, என் வெண்புறாவே, நிறை அழகே, என் தலை பனியால் நனைந்துள்ளது: என் தலைமயிர்ச் சுருள் இரவுத் தூறலால் ஈரமானது,3 என் ஆடையைக் களைந்து விட்டேன்: மீண்டும் அதனை நான் உடுத்த வேண்டுமோ? என் கால்களைக் கழுவியுள்ளேன்: மீண்டும் அவற்றை அழுக்குப்படுத்தவோ?4 என் காதலர் கதவுத் துளை வழியாகக் கையைவிட்டார்: என் நெஞ்சம் அவருக்காகத் துள்ளிற்று.5 எழுந்தேன் நான், காதலர்க்குக் கதவு திறக்க: என் கையில் வெள்ளைப்போளம் வடிந்தது: என் விரல்களில் வெள்ளைப்போளம் சிந்திற்று: தாழ்ப்பாள் பிடிகளில் சிதறிற்று.6 கதவைத் திறந்தேன் நான் என் காதலர்க்கு: அந்தோ! என் காதலர் காணவில்லை, போய்விட்டார்: என் நெஞ்சம் அவர் குரலைத் தொடர்ந்து போனது: அவரைத் தேடினேன்: அவரைக் கண்டேன் அல்லேன்: அவரை அழைத்தேன்: பதிலே இல்லை!7 ஆனால் என்னைக் கண்டனர் சாமக் காவலர்: நகரைச் சுற்றி வந்தவர்கள் அவர்கள்: அவர்கள் என்னை அடித்தனர்: காயப்படுத்தினர்: என் மேலாடையைப் பறித்துக் கொண்டனர்: கோட்டைச் சுவரின் காவலர்கள் அவர்கள்!8 எருசலேம் மங்கையரே, ஆணையிட்டுச் சொல்கிறேன்: என் காதலரைக் காண்பீர்களாயின் அவரிடம் என்ன சொல்வீர்கள்? காதல் நோயுற்றேன் நான் எனச் சொல்லுங்கள்.9 பெண்களுக்குள் பேரழகியே, மற்றக் காதலரினும் உன் காதலர் எவ்வகையில் சிறந்தவர்? இவ்வாறு எங்களிடம் ஆணையிட்டுக் கூறுகின்றாயே: மற்றக் காதலரினும் உன்காதலர் எவ்வகையில் சிறந்தவர்?10 என் காதலர் ஒளிமிகு சிவந்த மேனியர்: பல்லாயிரம் பேர்களிலும் தனித்துத் தோன்றுவார்!11 அவரது தலை பசும்பொன்: தலைமுடி சுருள்சுருளாய் உள்ளது: காகம்போல் கருமை மிக்கது.12 அவர் கண்கள் வெண்புறாக்கள் போன்றவை: பாலில் குளிந்து, நீரோடைகளின் அருகில் கரையோரங்களில் தங்கும் வெண்புறாக்கள் அவை.13 அவர் கன்னங்கள் நறுமண நாற்றங்கால்கள் போல்வன: நறுமணம் ஆங்கே கமழ்கின்றது: அவருடைய இதழ்கள் லீலிமலர்கள்: அவற்றினின்று வெள்ளைப்போளம் சொட்டுச்சொட்டாய் வடிகின்றது.14 அவருடைய கைகள் உருண்ட பொன் தண்டுகள்: அவற்றில் மாணிக்கக் கற்கள் பதிந்துள்ளன: அவரது வயிறு யானைத் தந்தத்தின் வேலைப்பாடு: அதில் நீலமணிகள் பொதியப் பெற்றுள்ளன.15 அவருடைய கால்கள் பளிங்குத் தூண்கள்: தங்கத் தளத்திலே அவை பொருந்தியுள்ளன: அவரது தோற்றம் லெபனோனுக்கு இணையானது: கேதுரு மரங்கள்போல் தலைசிறந்தது.16 அவரது வாய் இணையற்ற இனிமை: அவர் முழுமையும் பேருவகையே: எருசலேம் மங்கையரே, இவரே என் காதலர், இவரே என் நண்பர்.


திருவிவிலியம் பொது மொழிபெயர்ப்பு    

Free counters!