Chapter: Verses:
Start  End 
 
 
திருவிவிலியம் பொது மொழிபெயர்ப்பு    

திருவெளிப்பாடு

முன்னுரை

புதிய ஏற்பாட்டின் இறுதி நூலாகிய திருவெளிப்பாடு வேறுபட்ட ஓர் இலக்கிய வகையைச் சார்ந்தது. இதில் அடையாளங்கள் மிகுதியாய் உள்ளன. இத்தகு இலக்கிய வகை கி.மு. 2 ஆம் நூற்றாண்டையொட்டித் தோன்றி வளர்ந்ததாகத் தெரிகிறது. யூதர்கள் பிற இனத்தாரால் துன்புறுத்தப்பட்ட காலத்தில் நம்பிக்கையும் ஊக்கமும் ஆறுதலும் ஊட்டுவதற்காகவும் அக்கால நிகழ்ச்சிகளை ஒரு குறிப்பிட்ட பார்வையில் புரிந்து கொள்ள உதவுவதற்காகவும் திருவெளிப்பாட்டு வகை நூல்கள் உருவாயின. தானியேல் நூல் இத்தன்மை கொண்டது.

ஆசிரியர்

இந்நூலின் ஆசிரியர் தம்மை யோவான் எனக்; குறிப்பிடுகிறார் (1:1,4,9, 22:8). தாம் ஒரு திருத்தூதர் என்றோ இயேசுவின் சீடர் என்றோ அவர் தம்மைப் பற்றிக் கூறிக் கொள்ளவில்லை. மொழி நடை, இலக்கணம், இறையியல், கருத்துக்கள் ஆகியவற்றை ஆராய்ந்து பார்த்தால் இது நான்காம் நற்செய்தியை எழுதிய ஆசிரியரால் எழுதப்பட்டிருக்க இயலாது என்பது புலனாகும். தொடக்க காலத்திலிருந்தே கிறிஸ்தவ எழுத்தாளர்கள் இந்நூலின் ஆசிரியர் திருத்தூதர் யோவானே என்று கூறி வந்திருப்பது உண்மை எனினும், அகச்சான்று அடிப்படையில் பார்க்கும் போது இந்நூலாசிரியர் யோவான் என்னும் பெயருடைய தொடக்க கால மூப்பர் ஒருவராய் இருந்திருக்க வேண்டும் என்று சொல்வது முறையாகத் தெரிகிறது.

சூழலும் நோக்கமும்

இந்நூல் எழுதப்பட்ட காலத்தில் கிறிஸ்தவர்கள் கொடிய துன்பங்களுக்கு இலக்காயினர். அது நீரோவின் காலம் (கி.பி. 54-68) எனச் சிலர் கூறுகின்றனர். ஆனால் தொமீசியன் காலமாக (கி.பி. 89-96) இருக்கும் எனக்கூறுவதே ஏற்புடையதாகத் தெரிகிறது. உரோமை அதிகாரிகள் அரச வணக்கத்தைப் பரப்பிய நேரத்தில் உரோமைப் பேரரசர் சீசரை வணங்க மறுத்த கிறிஸதவர்கள் வெறுப்புக்கும் இகழ்ச்சிக்கும் இன்னலுக்கும் உள்ளானார்கள். இந்நிலையில் தான் இதன் ஆசிரியர் பத்மு தீவிலிருந்து இதனை எழுதியிருக்க வேண்டும்.

உள்ளடக்கம்

வாசகர்கள் துணிச்சலோடு அரச வழிபாட்டை எதிர்க்க வேண்டும். கடவுளுக்கும் சாத்தானுக்கும் இடையிலான இறுதிப் போர்விரைவில் வர இருக்கிறது. சாத்தான் கிறிஸ்துவின் சீடர்களுக்கு எதிராகத் துன்பங்களை மிகுதிப்படுத்துவான். ஆனால், கிறிஸ்தவர்கள் சாவு வரை உறுதியோடு இருக்க வேண்டும். அவர்களுக்கு அழிவு வராது என்பது உறுதி. கிறிஸ்து இயேசு வரும் போது அவர்கள் வெற்றி பெறுவார்கள். அப்போது கொடியவர்கள் என்றென்றைக்கும் அழிக்கப்படுவார்கள். கடவுளின் மக்களோ நிலைவாழ்வு பெறுவார்கள்.

அடையாளங்கள்

மேற்சொல்லப்பட்ட கருத்தை நேரடியாகச் சொல்வது ஆபத்தாக முடியும். எனவே இந்நூலில் பற்பல அடையாளங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன; காட்சிகள் மூலமாகவும் செய்திகள் சொல்லப்படுகின்றன.

7 என்னும் எண் 52 முறை இடம் பெறுகிறது. இது முழுமையைக் குறிக்கும் எண். ஒரு வேளை இது கடவுளையும் உலகையும் உள்ளடக்கும் எண்ணாக இருக்கலாம். ஏனெனில் முன்று என்னும் எண் கடவுளைக் குறிக்கும்; நான்கு என்னும் எண் உலகைக் குறிக்கும். இவ்வாறு அனைத்தையும் உள்ளடக்கிய முழுமையைக் குறிக்கின்ற எண்ணாக ஏழு கருதப்பட்டிருக்கலாம். மேலும் 10, 1000 என்பவையும் முழுமையைக் குறிப்பனவாக உள்ளன.

144 என்னும் எண்ணும், 12000, 1,44,000 என்பவையும் திருச்சபையைக் குறித்து நிற்கின்றன. 7 என்னும் முழுமையில் பாதியான 3 1|2 என்னும் எண்ணைப் பயன்படுத்தி, இன்னும் எத்தனை ஆண்டுகளுக்குத் துன்பங்கள் நிகழும் என்பதை அறுதியிட்டுக் கூற முடியாது என ஆசிரியர் சுட்டிக்காட்டுகிறார்.

கிறிஸ்தவர்களின் துன்பத்திற்குச் சின்னமாய் இருப்பவை ஏழு முத்திரைகள் (அதி 7,8), ஏழு எக்காளங்கள் (அதி 8,9), ஏழு கிண்ணங்கள் ( அதி 16).

துன்புறுத்துவோருக்குச் சின்னங்களாய் இருப்பவை விலங்கு ( அதி 13 ). விலைமகள் ( அதி 17), பாபிலோன் (அதி 18). இங்கு பாபிலோன் எதிரிகளின் அரசனான உரோமையைக் குறித்து நிற்கிறது.

இயேசு குரு என்றும் (1: 12-16), சிங்கம் என்றும் (5:5), ஆட்டுக்குட்டி என்றும் (5:6), குழந்தை என்றும் (12:5) மணமகன் என்றும் (22:12), விண்மீன் என்றும் (21:13, 22:16) குறிப்பிடுகிறார். கதிரவனை ஆடையாக உடுத்திய பெண் (12:1-16) புதிய இஸ்ரயேலாகிய திருச்சபையைக் குறித்து நிற்கிறார்.

அமைப்பு
  1. முன்னுரை (நூன்முகம்) 1: 1 - 3
  2. ஆசியாவிலுள்ள திருச்சபைகளுக்கு கடிதம் 1:4 - 3:22
  3. ஏழு முத்திரைகளுள்ள சுருளோடு 4:1 - 8:1
  4. ஏழு எக்காளங்கள் 8:2 - 11:19
  5. அரக்கப் பாம்பும் இரு விலங்குகளும் 12:1 - 13:18
  6. காட்சிகள் 14:1 - 15:8
  7. ஏழு கிண்ணங்கள் 16:1 - 21
  8. பாபிலோனின் அழிவும் எதிரிகளின் தோல்வியும் 17:1 - 20:15
  9. புதிய விண்ணகமும் புதிய மண்ணகமும் 21:1 - 22:15
  10. முடிவுரை 22:16 - 21


அதிகாரம் 1

1. முன்னுரை
நூன்முகம்
1 இது இயேசு கிறிஸ்து அருளிய திருவெளிப்பாடு. விரைவில் நிகழ வேண்டியவற்றைத் தம் பணியாளர்களுக்குக் காட்டுமாறு கடவுள் இவ்வெளிப்பாட்டைக் கிறிஸ்துவுக்கு அருளினார். அவர் தம் வானதூதரை அனுப்பித் தம் பணியாளராகிய யோவானுக்கு அவற்றைத் தெரிவித்தார். 2 அவர் கடவுள் அருளிய வாக்குக்கும் இயேசு கிறிஸ்து வெளிப்படுத்திய உண்மைக்கும், ஏன், தாம் கண்டவை அனைத்துக்குமே சான்று பகர்ந்தார்.3 இந்த இறைவாக்குகளைப் படிப்போரும் இவற்றைக் கேட்போரும் இந்நூலில் எழுதியுள்ளவற்றைக் கடைப்பிடிப்போரும் பேறு பெற்றோர். இதோ! காலம் நெருங்கி வந்துவிட்டது.

2. ஆசியாவிலுள்ள திருச்சபைகளுக்குக் கடிதம்
4 ஆசியாவில் உள்ள ஏழு திருச்சபைகளுக்கும் யோவான் எழுதுவது: இருந்தவரும் இருக்கின்றவரும் வரவிருக்கின்றவருமான கடவுளிடமிருந்தும், அவரது அரியணைமுன் நிற்கும் ஏழு ஆவிகளிடமிருந்தும், இயேசு கிறிஸ்துவிடமிருந்தும் உங்களுக்கு அருளும் அமைதியும் உரித்தாகுக! ஆசியா என்பது உரோமை
மாநிலங்களுள் ஒன்று.
இது இன்றைய துருக்கி நாட்டின்
ஒரு பகுதி ஆகும்.
5 இந்தக் கிறிஸ்துவே நம்பிக்கைக்குரிய சாட்சி: இறந்தோருள் முதலில் உயிர்பெற்று எழுந்தவர்: மண்ணுலக அரசர்களுக்குத் தலைவர். இவர் நம்மீது அன்புகூர்ந்தார்: தமது சாவு வாயிலாக நம் பாவங்களிலிருந்து நம்மை விடுவித்தார்.6 ஆட்சி உரிமை பெற்றவர்களாக, அதாவது நம் கடவுளும் தந்தையுமானவருக்கு ஊழியம் புரியும் குருக்களாக நம்மை ஏற்படுத்தினார். இவருக்கே மாட்சியும் ஆற்றலும் என்றென்றும் உரியன. ஆமென்.7 இதோ! அவர் மேகங்கள் சூழ வருகின்றார். அனைவரும் அவரைக் காண்பர்: அவரை ஊடுருவக் குத்தியோரும் காண்பர்: அவர்பொருட்டு மண்ணுலகின் குலத்தார் அனைவரும் மாரடித்துப் புலம்புவர். இது உண்மை, ஆமென்!8 அகரமும் னகரமும் நானே என்கிறார் கடவுளாகிய ஆண்டவர். இருந்தவரும் இருக்கின்றவரும் வரவிருக்கின்றவரும் எல்லாம் வல்லவரும் அவரே. கிரேக்க நெடுங்கணக்கில் முதல், கடைசி எழுத்துகளான 'அல்பாவும் ஒமேகாவும் நானே' என்பது மூலபாடம்.

கிறிஸ்துவின் காட்சி
9 உங்கள் சகோதரனும், இயேசுவோடு இணைந்த நிலையில் உங்கள் வேதனையிலும் ஆட்சியுரிமையிலும் மனவுறுதியிலும் பங்குகொள்பவனுமான யோவான் என்னும் நான் கடவுளின் வாக்கை அறிவித்து இயேசுவுக்குச் சான்று பகர்ந்ததால் பத்மு தீவுக்கு வர நேர்ந்தது.10 ஒரு ஞாயிற்றுக்கிழமையன்று தூயஆவி என்னை ஆட்கொள்ளவே எனக்குப் பின்னால் பெரும்குரல் ஒன்று எக்காளம்போல முழங்கக் கேட்டேன்.11 நீ காண்பதை ஒரு சுருளேட்டில் எழுதி, எபேசு, சிமிர்னா, பெர்காம், தியத்திரா, சர்தை, பிலதெல்பியா, இலவோதிக்கேயா ஆகிய ஏழு இடங்களிலும் உள்ள திருச்சபைகளுக்கு அதை அனுப்பி வை என்று அக்குரல் கூறியது.12 என்னோடு பேசியவர் யார் என்று பார்க்கத் திரும்பினேன். அப்பொழுது ஏழு பொன் விளக்குத்தண்டுகளைக் கண்டேன்.13 அவற்றின் நடுவே மானிடமகனைப் போன்ற ஒருவரைப் பார்த்தேன். அவர் நீண்ட அங்கியும் மார்பில் பொன் பட்டையும் அணிந்திருந்தார்.14 அவருடைய தலைமுடி வெண் கம்பளிபோலும் உறைபனிபோலும் வெண்மையாய் இருந்தது. அவருடைய கண்கள் தீப்பிழம்புபோலச் சுடர் விட்டன.15 அவருடைய காலடிகள் உலையிலிட்ட வெண்கலம்போலப் பளபளத்தன. அவரது குரல் பெரும் வெள்ளத்தின் இரைச்சலை ஒத்திருந்தது.16 அவர் தம் வலக்கையில் ஏழு விண்மீன்களைக் கொண்டிருந்தார். இருபுறமும் கூர்மையான வாள் ஒன்று அவரது வாயிலிருந்து வெளியே வந்தது. அவரது முகம் நண்பகல் கதிரவன் போல் ஒளிர்ந்தது.17 நான் அவரைக் கண்டபொழுது செத்தவனைப்போல் அவரது காலில் விழுந்தேன். அவர் தமது வலக் கையை என்மீது வைத்துச் சொன்னது: அஞ்சாதே! முதலும் முடிவும் நானே.18 வாழ்பவரும் நானே. இறந்தேன்: ஆயினும் இதோ என்றென்றும் வாழ்கின்றேன். சாவின் மீதும் பாதாளத்தின் மீதும் எனக்கு அதிகாரம் உண்டு.19 எனவே நீ காண்பவற்றை, அதாவது இப்பொழுது நிகழ்கின்றவற்றையும் இனி நிகழவிருப்பவற்றையும் எழுதிவை.20 எனது வலக்கையில் நீ கண்ட ஏழு விண்மீன்கள், ஏழு பொன் விளக்குத்தண்டுகள் ஆகியவற்றின் மறைபொருள் இதுவே: ஏழு விண்மீன்கள் ஏழு திருச்சபைகளின் வான தூதர்களையும், ஏழு விளக்குத்தண்டுகள் ஏழு திருச்சபைகளையும் குறிக்கும்.


திருவிவிலியம் பொது மொழிபெயர்ப்பு    

Free counters!