இருளில் வாழும் மக்கள் வெளிச்சத்தை காண்பார்களாக!!!

அன்பாவர்களே!! MyGreatMaster.com ஆரம்பித்து இன்றுடன் நான்கு வருஷம் முடிந்து 5 வது வருஷத்தில் காலடி எடுத்து வைக்கிறது.

இந்த உலகின் ஒளி யாகிய இயேசுகிறிஸ்து இருளில் இருக்கும் மக்கள் யாவரும் வெளிச்சத்தை காணும்படிக்கு இந்த உலகிற்கு ஒளியாக வந்தார். அவரை அறியாத மக்கள் யாவரும் அவரை அறிந்துக்கொள்ள வேண்டுமாக இந்த website மூலம் அவரைப்பற்றி பறைசாற்றி அவருடைய நிலைவாழ்வை எல்லா மக்களும் பெற்றுக்கொள்ள வேண்டுமாக எங்களால் ஆன முயற்சிகளில் ஈடுபட்டு ஆண்டவரின் வார்த்தைகளை பல வடிவில் கொடுத்துக்கொண்டு இருக்கிறோம் .

அவரை அறிந்த மக்கள் இன்னும் அவரின் வார்த்தைகளில் பெலப்பட்டு அவரின் வருகைக்கு ஆயத்
தமாக வேண்டுமாக விரும்புகிறோம். இந்த உலகில் வந்து பிறந்த எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற ஒளியே அந்த மெய்யான ஒளி .[ யோவான் 1:9 ]

காரிருளில் இருந்த மக்கள் பேரொளியைக் கண்டார்கள். சாவின் நிழல் சூழ்ந்துள்ள நாட்டில் குடியிருப்போர் மேல் சுடரொளி உதித்துள்ளது.”மனம் மாறுங்கள், ஏனெனில் விண்ணரசு நெருங்கி வந்துவிட்டது ” எனப் பறைசாற்றத் தொடங்கினர் என்று மத்தேயு 4 : 16,17 ஆகிய வசனங்களில் படிக்கிறோம். அதே மத்தேயு 24:14 ல் உலகமெங்கும் உள்ள எல்லா மக்களினத்தாரும் ஏற்றுக்கொள்ளுமாறு விண்ணரசைப் பற்றிய இந்நற்செய்தி உலகமெங்கும் அறிவிக்க வேண்டும் என்று உள்ளதால் நாங்களும் ஆண்டவரின் வார்த்தைக்கு பயந்து,கீழ்படிந்து இதை செய்து கொண்டு வருகிறோம்.

இயேசு அவர்களிடம், ”இன்னும் சிறிது காலமே ஒளி உங்களோடு இருக்கும்.இருள் உங்கள்மேல் வெற்றி கொள்ளாதவாறு ஒளி உங்களோடு இருக்கும் போதே நடந்து செல்லுங்கள். இருளில் இருப்பவர் எங்கே செல்கிறார் என்பது அவருக்குத் தெரியாது. ஒளி உங்களோடு இருக்கும்போதே ஒளியை ஏற்றுக்கொள்ளுங்கள். அப்போது ஒளியைச் சார்ந்தவர்கள் ஆவீர்கள்.” யோவான் 12 : 36.அந்த ஒளியாகிய இயேசு கிறிஸ்துவை அறிவிப்பதில் நாங்களும் ஒரு அங்கமாக இருப்பதை நினைத்து மகிழ்ச்சி கொள்கிறோம்.

இயேசுவிடம் நம்பிக்கை கொள்பவர் அவரிடம் மட்டுமல்ல, அவரை அனுப்பியவரிடமே நம்பிக்கை கொள்ளலாம். இயேசுவை காண்பவர் அவரை அனுப்பியவரையே காண்கிறோம். எனவே அவரிடம் நம்பிக்கை கொள்பவர் இருளில் இராதபடிக்கு பெரிய வெளிச்சத்தை காணலாம். அவரின் வருகைக்கு ஆயத்தமாகி காத்திருப்போம்.

நாங்கள் அவரிடமிருந்து கேட்டறிந்து உங்களுக்கு அறிவிக்கும் செய்தி இதுவே. கடவுள் ஒளியாய் இருக்கிறார். அவரிடம் இருள் என்பதே இல்லை. 1 யோவான் 1:5. இதை வாசிக்கும் அன்பான நெஞ்சங்களே!! நாம் ஒளியில் நடந்து ஒருவரோடு ஒருவர் நட்புறவு கொண்டு இந்த மாபெரும் ரகசியத்தை நாமும் பற்றிக்கோடு இன்னும் இருளில் இருக்கும் மக்களை ஒளியாகிய ஆண்டவரிடம் அழைத்து வரும் பணியை நம்முடைய தலையாயிய கடமையாக நினைத்து ஆண்டவரின் திருவுளத்தை நிறைவேற்ற ஒற்றுமையுடன் செயல்படுவோம். வெற்றி வாகை சூடுவோம்.

நீங்கள் யாவரும் இந்த MyGreatMaster.com  க்காக ஒரு ஐந்து நிமிடமாவது ஜெபித்துக்கொள்ள வேண்டுமாக மிகவும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம் மற்றவர்களுக்கும் அறிமுகம் செய்து
வையுங்கள். கடவுளின் ஆசீர்வாதத்தை ஒவ்வொருவரும் பெற்றுக்கொள்ள வேண்டுமாக நாங்கழும் ஒவ்வொரு நாளும் உங்களுக்காக ஜெபித்து மன்றாடுகிறோம்.

அன்பின் இறைவா!!!

உம்மை போற்றுகிறோம், புகழ்கிறோம். கடந்த 4 வருஷ காலமாக எங்களோடு இருந்து காத்து வழிநடத்தி வந்ததுபோல இனிவரும் நாட்களிலும் எங்களோடு கூடவே இருந்து எங்களை ஆசீர்வதித்து, காத்து கரம் பிடித்து வழிநடத்தும். எல்லா காரியங்களிலும் உமக்கே மகிமை செலுத்த உதவி செய்யும். இன்னும் உமக்கு சித்தமான, பிரயோஜனமான காரியங்களை நடப்பித்து உண்மையும், உத்தமுமாக வாழ உமது கிருபையை அருள் கூர்ந்து அளித்திட வேண்டுமாக இயேசுகிறிஸ்துவின் இணையற்ற நாமத்தில் வேண்டுகிறோம் நல்ல பிதாவே !

ஆமென்! அல்லேலூயா!!!

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.