|
இனிமைமிகு பாடல் (உன்னத சங்கீதம் | பாட்டு) |
|
அதிகாரம்
8
|
பாடல் 24: தலைவி கூற்று 1 நீர் என் உடன்பிறப்பாக இருக்கக் கூடாதா! என் அன்னையிடம் பால் குடித்தவராய் இருக்கலாகாதா! தெருவில் கண்டாலும் நான் உம்மை முத்தமிடுவேனே! அப்போது எவருமே என்னை இகழமாட்டார்.2 உம்மை என் தாய் வீட்டுக்குக் கூட்டி வருவேன்: எனக்குக் கற்றுத் தந்தவளின் மனைக்குள் கொணர்ந்திடுவேன்: மணமூட்டிய திராட்சை இரசத்தை உமக்குக் குடிக்கக் கொடுப்பேன்: என் மாதுளம் பழச்சாற்றைப் பருகத் தருவேன்.3 இடக்கையால் அவர் என் தலையைத் தாங்கிக் கொள்வார்: வலக்கையால் அவர் என்னைத் தழுவிக் கொள்வார்.4 எருசலேம் மங்கையரே, ஆணையிட்டுக் கேட்கின்றேன்: காதலை ஏன் தட்டி எழுப்புகின்றீர்? தானே விரும்பும்வரை அதை ஏன் தட்டி எழுப்புகின்றீர்?
பாடல் 25: தலைவி கூற்று 5 யார் இவள்! பாலைவெளியினின்று எழுந்து வருபவள்: தன் காதலர்மேல் சாய்ந்து கொண்டு வருபவள் யார் இவள்? கிச்சிலி மரத்தடியில் நான் உம்மை எழுப்பினேன்: அங்கேதான் உம்தாய் பேறுகால வேதனையுற்றாள். அங்கேதான் உம்மைப் பெற்றவள் பேறுகால வேதனையுற்றாள்.6 உம் நெஞ்சத்தில் இலச்சினைபோல் என்னைப் பொறித்திடுக: இலச்சினைப்போல் உம் கையில் பதித்திடுக: ஆம், அன்பு சாவைப்போல் வலிமைமிக்கது: அன்பு வெறி பாதாளம்போல் பொறாதது: அதன் பொறி, எரிக்கும் நெருப்புப் பொறி: அதன் கொழுந்து பொசுக்கும் தீக்கொழுந்து.7 பெருங்கடலும் அன்பை அணைக்க முடியாது: வெள்ளப்பெருக்கும் அதை மூழ்கடிக்க இயலாது: அன்புக்காக ஒருவன் தன் வீட்டுச் செல்வங்களை எல்லாம் வாரியிறைக்கலாம்: ஆயினும், அவன் ஏளனம் செய்யப்படுவது உறுதி.
பாடல் 26: தமையர் - தலைவி உரையாடல் 8 நம்முடைய தங்கை சிறியவள்: அவளுக்கு முலைகள் முகிழ்க்கவில்லை: அவளைப் பெண்பேச வரும்நாளில் நம் தங்கைக்காக என் செய்வோம்?9 அவள் ஒரு மதிலானால் அதன்மேல் வெள்ளியரண் கட்டிடுவோம்: அவள் ஒரு கதவானால் அதனை கேதுருப் பலகையால் மூடிடுவோம்.10 நான் மதில்தான்: என் முலைகள் அதன் கோபுரங்கள் போல்வன: அவர்தம் பார்வையில் நான் நல்வாழ்வு தருபவள் ஆவேன்.
பாடல் 27: தலைவன் கூற்று 11 பாகால்-ஆமோன் என்னுமிடத்தில் சாலமோனுக்கு இருந்தது ஒரு திராட்சைத் தோட்டம், திராட்சைத் தோட்டத்தை அவர் காவலரிடம் ஒப்படைத்தார்: அதன் கனிகளுக்காக எவரும் ஆயிரம் வெள்ளிக் காசுகூடத் தருவார்.12 எனக்குரிய திராட்சைத் தோட்டம் என்முன்னே உளது: சாலமோனே, அந்த ஆயிரம் வெள்ளிக்காசு உம்மிடமே இருக்கட்டும்: இருநூறு காசும் பழங்களைக் காப்போர்க்கே சேரட்டும்.
பாடல் 28: தலைவன் - தலைவி உரையாடல் 13 தோட்டங்களில் வாழ்பவளே! தோழர் கூர்ந்து கேட்கின்றனர்: உன் குரலை யான் கேட்கலாகாதோ!14 என் காதலரே! விரைந்து ஓடிடுக: கலைமான் அல்லது மரைமான் குட்டிபோல நறுமணம் நிறைந்த மலைகளுக்கு விரைந்திடுக! |