சீராக்கின் ஞானம் (சீராக் ஆகமம்) | ||
அதிகாரம் 13 |
||
தீய உறவு 1 மையைத் தொடுவோர் தங்களைக் கறைப்படுத்திக் கொள்வர்: செருக்குடையோருடன் சேர்ந்து பழகுவோர் அவர்களைப்போலவே மாறுவர்.2 உன்னால் சுமக்க முடியாத சுமைகளைத் தூக்காதே: உன்னைவிட வலிமை வாய்ந்தோருடனும் செல்வம் படைத்தோருடனும் உறவு கொள்ளாதே. மண்பானைக்கும் இரும்புக் கொப்பரைக்கும் என்ன தொடர்பு? கொப்பரையுடன் பானை மோதிச் சுக்குநூறாகும்.3 செல்வர்கள் அநீதி இழைப்பதுமன்றி ஏழைகளை இழிவுபடுத்தவும் செய்வார்கள்: ஏழைகளோ அநீதிக்கு ஆளாவதோடு மன்னிப்பும் கேட்கவேண்டும்.4 உன்னால் தங்களுக்குப் பயன் விளையுமாயின், செல்வர் உன்னைச் சுரண்டுவர்: உனக்கு ஒரு தேவை என்றால் உன்னைக் கைவிடுவர்.5 நீ வசதியாய் இருக்கும்போது உன்னோடு ஒட்டி உறவாடுவர்: உன்னை வெறுமையாக்கி விட்டுக் கவலையின்றி இருப்பர்.6 உன் உதவி அவர்களுக்குத் தேவைப்படும் போது உன்னை ஏமாற்றுவர்: உன்னைப் பார்த்துப் புன்முறுவல் பூத்து உனக்கு ஊக்கம் அளிப்பர்: உன்னிடம் நயந்து பேசி, உனக்குத் தேவையானது என்ன? எனக் கேட்பர். 7 நீ திகைக்கத் திகைக்க உனக்குப் பல்சுவை விருந்தூட்டி, சிறிது சிறிதாக உன்னை அறவே கறந்து, இறுதியில் உன்னை எள்ளி நகையாடுவர்: பின்னர் உன்னைக் காண நேர்ந்தால் ஒதுங்கிச் செல்வர்: உன்னைப் பார்த்துத் தலையாட்டுவர்.8 ஏமாந்து போகாதவாறு எச்சரிக்கையாய் இரு: உன் அறிவின்மையால் தாழ்வுறாதே.9 வலியோர் உன்னை விருந்துக்கு அழைக்கும்போது ஆர்வம் காட்டாதே: அப்படியானால் மீண்டும் மீண்டும் உன்னை அழைப்பர்.10 எதிலும் முந்திக்கொள்ளாதே: நீ ஒதுக்கப்படலாம். தொலைவில் ஒதுங்கி நில்லாதே: நீ மறக்கப்படுவாய்.11 வலியோரை உனக்கு இணையாக நடத்த முயலாதே: அவர்களின் நீண்ட பேச்சுகளை நம்பாதே. உன்னை ஆழம் காணவே அவர்கள் நீண்டநேரம் பேசுகின்றார்கள்: அவர்கள் சிரித்துப் பேசுவதும் உன்னைக் கணிப்பதற்கே.12 இரகசியங்களைக் காப்பாற்றாதோர் இரக்கமற்றோர்: உன்னைக் கொடுமைப்படுத்தவும் சிறைப்படுத்தவும் அவர்கள் தயங்கமாட்டார்கள்.13 அவற்றைக் காப்பாற்றுவதில் மிகவும் கவனமாய் இரு: ஏனெனில் உனது வீழ்ச்சியை மடியில் கட்டிக்கொண்டு நடக்கிறாய்.14 [நீ உறங்கும்போது இவற்றைக் கேட்க நேர்ந்தால் விழித்தெழு: உன் வாழ்நாள்முழுவதும் ஆண்டவர்மீது அன்புசெலுத்து: உன் மீட்புக்காக அவரை மன்றாடு.]![]() |
|