”ஆண்டவர் ஆட்சி செய்கின்றார்”

கடவுளைப்பற்றிய இஸ்ரயேல் மக்களின் நம்பிக்கை அற்புதமானது. ஏனென்றால், இந்த உலகத்தில் யார் ஆட்சி செய்தாலும், அவர்களைப் பொறுத்தவரையில் கடவுள் தான் அவர்களை நேரடியாக ஆட்சி செலுத்துகிறார் என்று உறுதியாக நம்பினர். மழையோ, புயலோ, துன்பமோ, இன்பமோ எல்லாமே கடவுளது விருப்பத்தின்படி தான் நடந்து கொண்டிருக்கிறது என்று, நம்பினர். அந்த நம்பிக்கையின் வெளிப்பாடு தான், இங்கே திருப்பாடல்களின் (திருப்பாடல் 93: 1ab, 1c – 2, 5) வரிகளாகத் தரப்பட்டிருக்கிறது.

கடவுள் எப்படி ஆட்சி செய்கிறார்? கடவுள் மாட்சிமையோடு ஆட்சி செய்கிறார். மனிதர்கள் ஆட்சி செய்வதற்கும், கடவுள் ஆட்சி செய்வதற்கும் மிகப்பெரிய வேறுபாடு இருக்கிறது. மனிதர்களின் ஆட்சி நிலையற்ற ஆட்சி. எப்போது கவிழும் என்பது தெரியாது. ஆனால், கடவுளின் ஆட்சி நிலையான ஆட்சி. அவரது வல்லமையின் முன்னால், மனிதர்களின் அதிகாரம் கால்தூசுக்கு சமம். அந்த அதிகாரம் தான், இன்றைய நற்செய்தியில் இயேசுவின் புதுமையில் வெளிப்படுகிறது. தீய ஆவியை உரிமையோடு அதட்டி, இயேசு ஒருவருக்கு சுகம் தருகிறார். அந்த நம்பிக்கையில் அவர் கடவுளிடமிருந்து பெற்றுக்கொண்ட அதிகாரம் வெளிப்படுகிறது. ஆக, கடவுளின் ஆட்சி உண்மையான அதிகாரம் கொண்ட ஆட்சி.

கடவுளால் முடியாதது இந்த உலகத்தில் எதுவும் இல்லை என்று கபிரியேல் வானதூதர் மரியாளுக்கு அறிவிக்கிறார். அது வெறும் வார்த்தையல்ல. முழுமையான உண்மை என்பதை நற்செய்தி நமக்கு எடுத்துக்காட்டுகிறது. அந்த நம்பிக்கையில் நாமும் வளர்வோம்.

~ அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.