இயேசுவின் வல்லமை

“நான் செய்யும் செயல்களை என்னிடம் நம்பிக்கை கொள்பவரும் செய்வார்: ஏன் அவற்றைவிடப் பெரியவற்றையும் செய்வார்” என்று இயேசு சொல்கிறார். இயேசு சொல்வதன் பொருள் என்ன? இயேசுவை விட வல்ல செயல்களை ஒருவர் செய்து விட முடியுமா? இயேசுவை விட வல்ல செயல்கள் செய்தால், அவர் இயேசுவை விட மேலானவர் ஆகிவிடமாட்டாரா? உண்மையிலே இயேசு இங்கே என்ன சொல்ல விரும்புகிறார்? இந்த கேள்விகள் அனைத்துமே, இந்தப்பகுதியை வாசிக்கின்றபோது நமக்கு ஏற்படும் எண்ணங்கள்.

தொடக்க காலத்திருச்சபை உண்மையிலே குணப்படுத்துகின்ற வல்லமையைப்பெற்ற ஒன்றாகத்திகழ்ந்தது. 1 கொரிந்தியர் 12 வது அதிகாரத்தில் தூய ஆவியார் அருளும் கொடைகளைப்பற்றிப் பார்க்கிறோம். 9 வது இறைவார்த்தைச்சொல்கிறது: “அந்த ஒரே ஆவியார் மற்றொருவருக்குப் பிணிதீர்க்கும் அருள் கொடையை அளிக்கிறார்”. அதேபோல் யாக்கோபு தனது திருமுகத்தில் 5: 14 ல் சொல்கிறார்: “உங்களுள் யாரேனும் நோயுற்றிருந்தால் திருச்சபையின் மூப்பர்களை அழைத்து வாருங்கள். அவர்கள் ஆண்டவரது பெயரால் அவர்மீது எண்ணெய் பூசி இறைவனிடம் வேண்டுவார்கள்”. ஆக, தொடக்கத்திருச்சபை வல்ல செயல்கள் செய்தாலும், இயேசுவை விட வல்ல செயல்கள் செய்யப்பட்டதா? என்றால் அது மிகப்பெரிய கேள்விக்குறி. பின் இந்தப் பகுதியை எப்படிப்புரிந்து கொள்வது? மருத்துவ உலகத்தின் வளர்ச்சியைப்பார்த்தோமென்றால், ஒரு நிலையிலிருந்து ஆரம்பித்த வளர்ச்சி இன்றைக்கு விஸ்வரூப வளர்ச்சியாக மாறியிருக்கிறது. பத்து ஆண்டுகளுக்கு முன்னதாக உள்ள வளர்ச்சிக்கும், இப்போதைய வளர்ச்சிக்கும் அதிக வேறுபாடு இருப்பதை நாம் பார்க்கலாம். இயேசு வாழ்ந்த காலத்தில் இயேசுவின் போதனை பாலஸ்தீனப்பகுதிகளுக்குள் முடங்கிக்கிடந்தது. ஆனால், இயேசு இறந்தபிறகு அசுர வளர்ச்சியாக, இந்த உலகமெங்கிலும் இறையரசு பரவியது. இயேசு கொடுத்த தொடக்கம் இன்றைக்கு மிகப்பெரிய ஆலமரமாக, இந்த உலகமெங்கிலும் வளர்ந்திருக்கிறது. ஒருவர் இயேசு மீது நம்பிக்கை வைத்தால், அவருடைய துணைகொண்டு எதையும் செய்ய முடியும் என்பதுதான் இயேசு நமக்குக் கற்றுத்தரும் செய்தி. அனைத்திலும் இயேசுவின் வல்லமை இருக்கும். இயேசுவை விட வல்ல செயலாக இருந்தாலும், இயேசுவின் வல்லமை இல்லாமல் எதையும் செய்ய முடியாது. இயேசுவின் வல்லமையோடு நம்மால் அனைத்தையும் செய்து முடிக்க முடியும்;.

இயேசுவின் வல்லமை மீது நாம் முழுமையான நம்பிக்கை வைப்பதற்கு அழைக்கப்படுகிறோம். இயேசுவின் வல்லமை இயேசுவின் வாழ்நாட்களோடு முடங்கிப்போய்விடவில்லை. அவரின் ஆற்றல் கொண்டு, அதைவிட அதிக வல்லமையுள்ள செயல்களை நம்மால் செய்ய முடியும். அத்தகைய ஆற்றலை நாம் நிரம்பப்பெறுவோம்.

~ அருட்பணி. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.