இயேசுவில் நமது நம்பிக்கை

வாழ்வைப்பற்றி பலவிதமான சிந்தனைகளை, பல காலகட்டங்களில் மக்கள் கொடுத்திருக்கிறார்கள். அதிலே குறிப்பிடத்தகுந்த சிந்தனை, இந்த உலகத்தில் வாழுகிறபோது, எதிர்காலத்தை நினைத்தோ, அடுத்த உலகத்தை நினைத்தோ கவலை கொள்ளத்தேவையில்லை. இந்த உலகம் உண்மையானது. இந்த நிமிடம் உண்மையானது. அதில் மகிழ்ச்சியாக வாழ வேண்டும். எதிர்காலத்தைப்பற்றி நினைத்து, வீணாகக் கவலைக் கொள்ளக்கூடாது என்று சொல்வார்கள். இன்றைய நற்செய்தியில் இயேசுவின் வார்த்தைகளை சற்று தியானிக்கிறபோது, யூதர்களின் மனநிலை தான் நினைவுக்கு வருகிறது.

யூதர்களைப் பொறுத்தவரையில் இந்த உலகத்தைப்பற்றிய பார்வை இரண்டு கட்டங்களை உடையது. இந்த உலகம் தீய ஆவிகளின் பிடியில் இருக்கிறது என்றும், நாம் மகிழ்ச்சியாக வாழக்கூடிய எதிர்காலம் ஒன்று இருக்கிறது என்றும் நம்பினர். அந்த எதிர்கால வாழ்விற்கான தயாரிப்பு தான், நாம் வாழக்கூடிய வாழ்வு. எனவே, நிகழ்காலத்தில் துன்பங்கள், பாடுகள் இருந்தாலும் அதைப்பற்றி கவலைப்படாமல், எதிர்காலத்தில் நாம் எதிர்கொள்ள இருக்கிற பேரின்பத்தை மனதில் நிறுத்தி வாழ, இது நமக்கு அழைப்புவிடுக்கிறது. இது நிகழ்காலத்தை தவிர்ப்பதாக அர்த்தம் கிடையாது. மாறாக, நிகழ்கால துன்பத்திலும் நிலையாக, உறுதியாக, நம்பிக்கையாக வாழ நமக்கு உதவியாக இருக்கிறது.

கிறிஸ்தவர்களாகிய நமக்கு, துன்பமோ, இன்பமோ நம் இயேசு எந்நாளும் நம்மோடு இருக்கிறார் என்கிற செய்தியை, இந்த பகுதி நமக்குத்தருகிறது. கடவுள் நம்பிக்கையோடு எதையும் அணுக நாம் துணிவு கொள்வோம். வரப்போகிற எத்தகைய துன்பத்திலிருந்தும் நம்மைக்காக்க வல்லவர், நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவாக இருக்கிறார். அந்த வல்ல இறைவனை முழுமையாக நம்புவோம்.

~ அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.