தாக்கத்தை ஏற்படுத்தும் வாழ்வு

இன்றைக்கு எத்தனையோ சொற்பொழிவுகள் மக்கள் மத்தியில் ஆற்றப்படுகின்றன. அது அரசியல்வாதிகளாக இருக்கலாம், அரசியல் தலைவர்களாக இருக்கலாம் அல்லது சமயத்தலைவர்களாக இருக்கலாம். ஆற்றப்படுகின்ற எல்லா சொற்பொழிவுகளும், ஏதாவது விளைவுகளை ஏற்படுத்துகிறதா? என்றால், அது கேள்விக்குறி. விளைவுகளை ஏற்படுத்தாத எந்த சொல்லும் வீணாணவையே என்று சொல்வார் ஒரு புகழ்பெற்ற போராளி. உதிர்க்கப்படுகின்ற சொற்கள் ஒவ்வொன்றும், அதற்கான விளைவை, அது ஏற்படுத்த வேண்டும். இன்றைய நற்செய்தியும், இதை அடியொற்றித்தான், எழுதப்பட்டிருக்கிறது.

புளிப்பு மாவு உவமை, இங்கே தரப்படுகிறது. கிறிஸ்தவர்கள் ஒவ்வொருவரின் வாழ்வும், இந்த புளிப்பு மாவைப்போல, விளைவை ஏற்படுத்தக்கூடியவையாக இருக்க வேண்டும். அளவு சிறிதளவே இருந்தாலும், அது புதிய மாவு முழுவதையும், புளிப்பேற்றச் செய்கிறது. அதேபோல, கிறிஸ்தவர்களின் வாழ்வு, மற்ற மக்களின் வாழ்வில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும், என்று, இந்த இறைவார்த்தை அழைப்பு விடுக்கிறது. இப்படிப்பட்ட, தாக்கத்தை தொடக்க கிறிஸ்தவர்கள் பிற மக்களுக்கு மத்தியில் ஏற்படுத்தினர். அதனால் தான், கிறிஸ்தவ விசுவாசம் இந்தளவுக்கு தழைத்தோங்கியிருக்கிறது. ”உலகமெங்கும் கலகம் உண்டாக்குகிற இவர்கள் இங்கேயும் வந்துவிட்டார்கள்” (தி.பணி 17: 6). கிறிஸ்தவர்களின் வாழ்வு மக்கள் மத்தியில் ஏற்படுத்துகிற விளைவுகளைப் பார்த்து, சொல்லப்பட்ட வார்த்தைகள் இவை. அந்தளவுக்கு, விசுவாசத்திற்கு உரம் கொடுத்து, புளிப்பு மாவாக விளங்கியவர்கள் முதல் கிறிஸ்தவர்கள்.

விசுவாசத்தைப் பெற்றுக்கொண்ட, நம் வாழ்வு, மற்றவர்களுக்கு தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியதாக இருக்கிறதா? தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை என்றாலும், மற்றவர்களுக்கு இடறலாக இல்லாமல் இருக்கிறதா? சிந்தித்துப் பார்ப்போம். நமது வாழ்வு, தொடக்க கால கிறிஸ்தவர்களைப் போல, மக்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்த, இறைவனிடம் மன்றாடுவோம்.

~ அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.