தூய ஆவியின் ஆற்றல்

இயேசுவின் சீடர்கள் வருத்தமடைவதற்கு பல காரணங்கள் இருந்தது. அவற்றுள் முதன்மையான காரணம், இயேசு விரைவில் அவர்களை விட்டு பிரிய இருக்கிறார் என்பதுதான். தான் சீடர்களை விட்டுப்பிரிந்தாலும், அது சீடர்களுக்கு ஆதாயம் தான் என்பது இயேசுவின் எண்ணம். ஏனென்றால், இயேசுவின் பிரிவு அவர்களுக்குத் தூய ஆவியானவரின் துணையைத்தரும். உடல் என்பது வரையறைக்கு உட்பட்டது. உடலுக்கு என்று எல்லை இருக்கிறது. ஆனால், ஆவிக்கு எல்லை கிடையாது. எங்கும் செல்லலாம். உடலுக்கு இருப்பது போல, குறிப்பிட்ட காலம் தான் வாழ்வு என்பதெல்லாம் கிடையாது. எனவேதான் இயேசு இறந்து உயிர்த்த பிறகு தனது சீடர்களிடம் ”இதோ! உல முடிவுவரை எந்நாளுமு் நான் உங்களோடு இருக்கிறேன்” என்று மத்தேயு 20: 20 ல் சொல்கிறார்.

இந்த ஆவியின் ஆற்றல் தான் இயேசுவை நம்புகிற, இயேசுவின் வார்த்தையை வாழ்வாக்குகிற ஒவ்வொரு மனிதர்களையும் இயக்கிக்கொண்டிருக்கிறது. இன்றைக்கு எத்தனையோ புத்தகங்கள் இருக்கிறது. அவற்றிலெல்லாம் தனித்தன்மை வாய்ந்தது விவிலியம் என்று நாம் சொல்கிறோம். ஏன்? அதுவும் வெறும் வரலாற்று நூல்தானே என்று ஒருவர் வாக்குவாதம் செய்யலாம். அது வெறும் இஸ்ரயேல் மக்களின் இறையனுபவம். அதனால், இன்று நமக்கு ஒன்றுமில்லை என்று கூட நாம் சொல்லலாம். ஆனால், அது தவறு. காரணம், இன்றளவும் தூய ஆவி இறைவார்த்தை வழியாக நம்மோடு பேசிக்கொண்டிருக்கிறார். இறைவார்த்தை என்றோ வரலாற்றில் வாழ்ந்த மக்களுக்கு மட்டுமல்ல, இன்றும் நமக்கு வாழ்வு தந்து கொண்டிருக்கிறது. அதுதான் தூய ஆவியானவர் தரும் வாழ்வு. அத்தகைய துணையாளரை, இயேசு நமக்குத்தருவதாக வாக்களிக்கிறார்.

நமது வாழ்வில் தூய ஆவியானவர் நம்மிலே இணைந்து செயலாற்ற நாம் முன்வர வேண்டும். அவரது இயக்கம் நம்மிலே இருக்க வேண்டும். அவரது துணை நம்மை வழிநடத்த வேண்டும். அப்போது நாமும் இயேசுவின் சாட்சிகளாய் மாறுவோம்.

~ அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.