பெற்றுக்கொண்டோர் பேறுபெற்றோர்

பெற்றுக்கொண்டு கொடுப்பதுதான் கிறிஸ்தவ வாழ்க்கை என்கிற விழுமியத்தை நமக்குக் கற்றுக்கொடுக்கிற அருமையான பகுதி. நாம் கடவுளிடமிருந்து பெற்றுக்கொள்ளக்கூடிய செல்வங்கள் அனைத்துமே பயன்படுத்துவதற்கும், மற்றவர்களுக்கு பயன்படுவதற்கும் தான் என்பதை நாம் உணர, இன்றைய நற்செய்தி நமக்கு அழைப்புவிடுக்கிறது. இயேசு தனது சீடர்களை நற்செய்திப் பணிக்கு அனுப்புகிறார். அவர்களுக்கு தேவையான வல்லமையைக் கொடுக்கிறார். நோயாளிகளைக் குணப்படுத்துவதற்கு, தீய ஆவிகளை ஓட்டுவதற்கு, நற்செய்தியை துணிவோடு அறிவிப்பதற்கு, அவர்களை தயாரித்து அனுப்புகிறார்.

சீடர்கள் இயேசுவிடமிருந்து வல்லமையைப் பெற்றுக்கொண்டது, தாங்களே வைத்திருப்பதற்காக அல்ல, அதை மற்றவர்களுக்கு கொடுப்பதற்காகத்தான். அந்த வகையில், இயேசுவின் சீடர்கள் அதனை நிறைவாகச் செய்கிறார்கள். அதில் மகிழ்ச்சியும் அடைகிறார்கள். காரணம், பெற்றுக்கொண்டு, கொடுப்பதில் இருக்கும் மகிழ்ச்சியை அவர்கள் அனுபவித்துவிட்டார்கள். கிறிஸ்தவ வாழ்வு என்பது, கடவுளிடமிருந்து பெற்றுக்கொண்டு, மற்றவர்களுக்கு கொடுப்பதுதான். இன்றைக்கு இருக்கிற அரசியல்வாதிகள், அரசியலை ஒரு வியாபாரமாகப் பார்க்கிறார்கள். நான் தேர்தலில் இவ்வளவுக்கு முதலீடு செய்கிறேன். நான் எவ்வளவுக்கு வாரிச்சுருட்ட முடியுமோ, அவ்வளவுக்கு சுருட்ட வேண்டும். இதுதான் அரசியல்வாதிகளின், அதிகாரவர்க்ககத்தில் இருக்கிறவர்களின் எண்ணமாக இருக்கிறது.

இத்தகைய மனப்போக்கிலிருந்து, பெற்றுக்கொண்டதை கொடுப்பவர்களாக மாறுவோம். கடவுளின் வல்லமை யாருக்கு தரப்படுகிறதோ, அவர்கள் பேறுபெற்றவர்கள். அந்த வல்லமையை, ஆற்றலை ஏழை, எளியவர்களின் வாழ்வை உயர்த்தப் பயன்படுத்துவோர், இன்னும் அதிகம் பேறுபெற்றோர்.

அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.